தமிழ் புத்தாண்டு மாற்றம் - கருணாநிதிக்குப் பாராட்டு விழா
இருக்கிறது.
சென்னையில் இயங்கிவரும் சங்கத்தமிழ் பேரவை சார்பில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி பாராட்டும் விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தமிழர் பேரவையின் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
இஞ்சிக்குடி இ.எம்.சுப்பிரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு வேறு எவர் படைத்தார் வியந்து சில பேச வந்தோம் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு தை மகளைப் பெற்றெடுத்த தமிழ் மகனை பாடுகிறேன் என்ற தலைப்பில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசை நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு எத்தனை முகம் உனக்கு, எண்ணிட முனைகின்றோம் என்ற பொதுத் தலைப்பில் பண்பு பாராட்டல் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு பேராசிரியர் கண.சிற்சபேசன் தலைமை தாங்குகிறார்.
தொடர்ந்து நடைபெறும் வாழ்த்தரங்கத்திற்கு நிதி அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பேரவை தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
அமைச்சர் துரைமுருகன் தொடக்க உரையாற்றுகிறார்.
தமிழண்ணல் வ.அய்.சுப்பிரமணியன், ச.அகத்தியலிங்கம், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், ரா.நாகசாமி, ஊரனடிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இறுதியில் முதல்வர் கருணாநிதி மகிழ்வுரை வழங்குகிறார்.
இது காலக் கணக்கின்றி காத்துக் கிடந்த தமிழ் மக்களிடையே தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக மலரச் செய்த தமிழ்த்தாயின் தலைமகனுக்கு தமிழ்ச் சான்றோர் நிகழ்த்தும் நன்றிப் பெருவிழா ஆகும்.
ஆயிரம் பேர் வாழ்த்த அணிதிரண்டு நின்றாலும், தாய்த்தமிழின் ஓலிக்கேட்டால் தலை வணங்கி வருகின்ற தமிழினத் தலைவர் முதல்வர் கருணாநிதி தமிழ் ஆண்டின் முதல் மாதம் தை மாதம் என உறுதி செய்து உலகிற்கு அறிவித்தார்.
தன்மானத்தை நாடி நரம்புகளில் ஏற்றி, இன்மானத்தை மூச்சுக் காற்றாய் சுவாசித்து, மொழிமானத்தைத் தொப்புள் கொடியில் சுமந்து வந்த தங்கத் தலைவருக்கு சங்கத்தமிழர் பேரவை எடுக்கும் மங்கலப் பெருவிழா இது.
தைத்திங்கள் வள்ளுவனைப் பெற்றெடுத்த வளமான தமிழ் திங்கள். உதயசூரியன் தெறிகிருந்து உலகாளும் தீரமிகு நற்றிங்கள்.
வசந்தத்தைக் கொண்டுவரும் வளமான பழந்திங்கள். வரலாறு படைத்தானை வாழ்கின்ற காலத்தில் வாழ்த்த மறந்த இனம். வாழ்வித்து போனதுண்டு. நாங்கள் பேறு பெற்றோம்.
நாயகனை வாழ்ததுகிறோம். தமிழ்த்தாயின் தவப்பயனை, தமிழினிய தேர் ஏற்றி வடம் பிடித்தோம், தமிழரெல்லாம், மலரெடுத்து மலருக்கு மாலை இடுகின்றோம். ஒளியெடுத்துச் சூரியனை ஒளியூட்ட முயல்கின்றோம். நீ தந்த தமிழெடுத்தே நின்னையாம் வாழ்த்துகின்றோம்.
தமிழர்களே திரண்டு வந்து தைத்திங்கள் தந்தவரைத் தலைவணங்கிப் போற்றுங்கள். தமிழ் கேட்டு வாழ்த்துங்கள் என ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.