ஒரு மனிதனின் கதை!
- ப.கவிதா குமார்தமிழ்த் திரையுலகில் நடை பெறும் பெரும்பாலான காதல் திரு மணங்கள் சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தாலும், ஈகோ பிரச்சனை யாலும் பிரிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றது.
கடுமையான போராட்டங்களுக்கு பின் திருமணம் புரிந்து கொண்ட ராமராஜன்- நளினி, பார்த்திபன்- சீதா இன்னும் பலரை அந்த பட்டியலில் சேர்க்க முடியும், தற்போது காதல் மணம் புரிந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், விவாகரத்து கோரி தனது மனைவி லலிதாகுமாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளார்.
இதுபோன்ற பிணக்குகளும், பிரிவுகளும் தான் நல்ல ஒரு நடிகனை நம்மிடமிருந்து பிரித்துள்ளது.
கடந்த 1975- ஆம் ஆண்டு, “ஏழாவது மனிதன்" படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் பிரவேசித்த நடிகர் ரகுவரன், கடும் போட்டிகளுக்கு இடையே தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டவராவார்.
மந்தகாச சிரிப்பும், கைதட்டல்களுமாக இருந்த வில்லத்தனத்தை மெதுவான தன் வார்த்தைகளால் மாற்றி அமைத்தவர் ரகுவரன். நடிகர் சத்திய ராஜூக்கு, “தகடு, தகடு" வசனம் ஒரு தனிப்பாட்டையை அமைத்துக் கொடுத்தது போல, “ஐ நோ" என்ற வார்த்தை ரகுவரனுக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது.
தமிழக மேடைகளில் பலகுரல் கலைஞர்கள் அனைவராலும் விரும்பி பேசப்படும் குரல்களில் ரகுவரனின் குரலும் ஒன்று, தொண்டைக் குழிக்குள் இருந்து அதிராமல் வந்த வார்த்தைகள், அவரை உச்சநடிகர் எனச் சொல்லப்படும் ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களுக்கு வில்லத்தனத்தை பெற்றுத் தந்தது.
ஊர்க் காவலன் துவங்கி சிவாஜி வரை நீளும் அப்பட்டியலில் ரகுவரனுக்கு தமிழகத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அதன் காரணமாக முதல் படத்திற்கு பிறகு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் இன்றி வில்லத்தனம் செய்து கொண்டிருந்தவரை வி.சி.குகநாதன், மீண்டும் தன்படங்களில் கதாநாயகனாக மாற்றவைத்தது.
விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்" படம் அவரது சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. கார் ரேஸில் ஈடுபாடுடைய அவர் கடைசி காலத்தில் நடிக்க கேரவேனில் வந்து நடித்தது அவர் நடிப்பின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியது. பீமா படத்தில் இதேபோன்றுதான் அவர் நடித்துள்ளார். அந்த அளவு அவரது உடல் பாதிக்கப்பட்டிருந்தது.
மலையாளப் படங்களில் தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரோகிணியை பல ஆண்டுகளாக காதலித்து அதன்பிறகு மணம் புரிந்து கொண்டவர் ரகுவரன். அவரிடமிருந்து ரோகிணி விவாகரத்து பெற்றுக் கொண்டதும், அதனால் அவரது மகனை அவரிடமிருந்து பிரித்ததும் ரகுவரனை வேறு உலகத்திற்கு தள்ளியது.
அதன் காரணமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு ஆன்மீக வழியில் இறங்கி, மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்து, உடல்நலம் பாதிக்கப் பட்டு கடந்த 19ந் தேதி இறந்து போனார்.
பொதிகை தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன், ரகுவரன் நடித்த "ஒரு மனிதனின் கதை" நீண்ட நாட்கள் ஒளிபரப்பானது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த மனிதனின் கதை சட்டென அடங்கிப் போனது தமிழ்த் திரையுலகத்திற்கு ஏற்பட்டுள்ள நீண்ட கால இழப்பு என்றால் அதை மறுக்கப்போகிறவர் யாராக இருப்பர்?
நன்றி: தீக்கதிர்