விரைவில் ஆடியோ வடிவில் திருக்குறளைக் கேட்கலாம்
அதிலும், முதல்வர் கருணாநிதியின் பொழிப்புரையோடு. டிஜிட்டல் ஆடியோ வடிவில் திருக்குறளைக் கொண்டு வரும் பணியை முத்தரசி ரவி மேற்கொண்டுள்ளார். இவர் பல்வேறு எம்.ஜி.ஆர். படங்களுக்கு திரைக்கதை எழுதியவரும், கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவருமான முரசொலி சொர்ணத்தின் மகள் ஆவார்.
இதுகுறித்து முத்தரசி கூறுகையில், திருக்குறள் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தாலும் கூட, இன்னும் படிப்பறிவில்லாதவர்கள் மத்தியில் அதை போய்ச் சேரவில்லை. அதை இந்த டிஜிட்டல் ஆடியோ திருக்குறள் ஈடுகட்டும் என்கிறார்.
ஏற்கனவே ஓம் உள்ளிட்ட பல்வேறு ஒற்றை வரி மந்திரங்களை, மைக்ரோசிப்பில் பதிவு செய்து அதை மெட்டல் பாக்ஸில் வைத்து, விற்பனைக்கு விட்டுப் பிரபலமானவர் முத்தரசி ரவி. இது இன்று வீடுகள் தோறும், கோவில்கள் தோறும் பிரபலமாக உள்ளது.
அதே அடிப்படையில்தான் இப்போது 1330 திருக்குறள்களையும், மைக்ரோசிப்பில் பதிவு செய்து வெளியிடவுள்ளார் முத்தரசி.
இந்தப் பாடல்களை சீர்காழி சிவசிதம்பரம் இசையமைத்துப் பாடியுள்ளார். முதல்வர் கருணாநிதியின் பொழிப்புரையும் இதில் இடம் பெற்றுள்ளது.
திருக்குறள் என்று இந்த ஆடியோ வடிவத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குறளையும் ஒரு ராகத்தில் பாடியுள்ளாராம் சீர்காழி சிவசிதம்பரம். திருக்குறளின் அழகே அதன் மொழிச் செறிவுதான். அது கெடாமல் பார்த்துக் கொள்வதில் நான் அதிக அக்கறை காட்டினேன். அதேசமயம், மக்களுக்கு எளிதில் போய்ச் சேரும் வகையிலும் இந்தப் பாடல்களை உருவாக்கியுள்ளோம் என்கிறார் சிதம்பரம்.
இந்த அருமையான பணியில் வயலின் கலைஞர் சிக்கல் பாஸ்கரன், அவரது மகன் சிக்கல் பாலசுப்ரமணியன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம், ரேவதி ராகத்தில் இசைக்கப்பட்டுள்ளது.
10 மணி நேரத்தில் மொத்த குறளையும் பாடி முடித்து பதிவு செய்து விட்டனராம்.
ரூ. 3000 விலை நிர்ணயித்துள்ள இந்த டிஜிட்டல் திருக்குறள், கல்வி நிறுவனங்கள், தனி நபர்களுக்கு விரைவில் விற்பனைக்கு வருகிறது.