நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பிப் 1 முதல் 3 வரை கரிசல் திருவிழா
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கரிசல் திருவிழா துவங்குகிறது. இது தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை மாணவர்கள் மனோ மீடியா கிளப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தொடர்பியல் துறை மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் கரிசல் திருவிழா என்ற பெயரில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான கரிசல் திருவிழா வரும் பிப்ரவரி 1-ம் தேதி துவங்கி 3-ம் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டோகிராபி, குரும்படம், டாக்குமெண்டரி படம், ஆட்-மேட், மீடியா குவிஸ், ரேடியோஜாக்கி, அனிமேஷன், கிராபிக்ஸ் உள்பட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கரிசல் திருவிழாவில் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3-ம் தேதி மாலையில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜூ, மனோ மீடியா கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.