'இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஓலைச் சுவடிகள் அதிகம்'
அதேபோல இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கல்வெட்டுக்களில் முக்கால்வாசி தமிழகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் சென்னையில் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற தலைப்பில் ஆகஸ்டு 15ம் தேதி புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. இது 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இக் கண்காட்சியில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை கபாலீசுவர் திருக்கோவில், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில், திருநின்றவூர் விஷ்ணு கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில், திருவொற்றிiர் ஆதிபுரீசுவரர் கோவில், பாடி திருவாலீசுவர் கோவில் போன்ற பல்வேறு பழமையான கோவில்களின் புகைப்படங்களும், அவற்றின் வரலாறும் இடம்பெற்றுள்ளன.
இந்த, சைவ தலங்களை பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற பல நாயன்மார்களும், வைணவ தலங்களை பற்றி ஆழ்வார்களும் பாடியுள்ளார்கள். அவர்கள் பாடிய பாடல்களும், பாசுரங்களையும் கண்காட்சியில் பொதுமக்கள் காணலாம். இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பார்க்கலாம்.
இந்த கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்து தொல்லியல் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசுகையில்,
தமிழகத்தில் முன்பு ஜைன மதமும், புத்த மதமும்தான் செழித்தோங்கியிருந்தன. அப்போது, நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி மேற்கொண்ட இறைப்பணி காரணமாகவும், தமிழ் தழைத்து வளர்ந்தது. அவர்கள் பாடிய பாடல்கள் பல நமக்கு கிடைத்திருப்பதால், தமிழ் மொழி செம்மொழியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தமிழுக்கு பெருமையை சேர்த்து வைத்து போயிருக்கிறார்கள். தமிழ் இன்றளவும் தழைத்தோங்குவதற்கான பெருமை அவர்களையே சாரும்.
அவர்களது படைப்புகளை நாங்கள் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே மிக அதிகமாக 25 ஆயிரம் ஓலைச்சுவடிகள் (தமிழ்) உள்ளன.
இதுதவிர பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட 5 ஆயிரம் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளையும் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இது தமிழ் மொழியின் தரத்தை உயர்த்துவதாக உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட 85 நினைவுச்சின்னங்கள் உள்ளன என்றார்.