கடனா அணை அதிரிமகரிஷி, கோரக்கநாதர் கோயிலில் 27ம் தேதி வைகாசி விசாகம்
கடையம்: நெல்லை மாவட்டம் கடையம் அருகே கடனா அணைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோரக்கநாதர் கோவிலில் வருகிற 27ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் கோரக்கர் மலை அமைந்துள்ளது. இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம்.
கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது.
சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.
இங்கு வரும் 27ம் தேதி வைகாசி விசாக பெருவிழா நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு சிவசைலம், சிவசைலநாத சாமி கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி காவடிகள் புறப்பட்டு கடனா அணைக்கு மேல் வீற்றிருக்கும் கோரக்கநாதர் கோயிலை அடையும். கோயிலில் உள்ள கோரக்கநாதர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு அபிஷேகங்கள், புஷ்ப அலங்காரம், தீபாரதனை, அன்னதானம் நடக்கிறது.
கோரக்க நாதர் ஆலயத்திற்கு வருகிறவர்கள் பிளாஸ்டிக் பை கொண்டு வரகூடாது. உணவு பொருட்களை கண்ட இடத்தில் கொட்ட கூடாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும் என வனத்துறையினர் கட்டுபாடு விதித்துள்ளனர். தற்போது கோடையிலும் அங்கு இதமான காற்று வீசுவதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.