துபாய் கல்வி நிறுவனத்தின் மோசடி-பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுகிறது இந்திய தூதரகம்
துபாய்: துபாயில் உள்ள ஒரு கல்வி நிறுவனம், தொலை தூர கல்வி மூலம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மோசடி செய்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க இந்திய தூதரகம் முன் வந்துள்ளது.
துபாய் கேம்பஸ் எஜீகேஷனல் இன்ஸ்ட்டியூட் சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையமாக செயல்படுகிறது. இதில் பதிவு செய்த மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் பட்டம் கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை பல்கலைக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ. 30 லட்சத்தை செலுத்தாததால் தான் மாணவர்களின் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க தற்போது இந்திய தூதரகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தூதரக அதிகாரிகள் கூறுகையில்,
கேம்பஸ் எஜீகேஷனல் இன்ஸ்ட்டியூட் பற்றி எங்களுக்கு வந்த புகார்களை சென்னை பல்கலைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
மாணவர்களிடம் இருந்து கல்விக்கட்டணத்தை வசூலித்துவிட்டு, பல்கலைக் கழகத்திற்கு செலுத்தாததால் தான் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தஙகள் பதிவு விவரங்களை [email protected] என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அனுப்பப்படும் விவரங்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.
எமிரேட்ஸ் கல்வித் துறையின் விதிமுறைகளின்படி பயிற்சி நிறுவனங்களுக்கு பல்கலைக் கழக பட்டம் அளிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கோ, அல்லது பல்கலைக் கழகங்களுடன் கூட்டு வைப்பதற்கோ அனுமதி இல்லை. ஆனால், நிறைய கல்வி நிறுவனங்கள் விதிகளை மதிப்பதில்லை.
விதிமுறையை மீறி, அந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டபோது, சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
தன் பெயரை தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய 2 வருட படிப்பிற்கு 15, 500 திர்ஹம் கொடுத்தும், அவருக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை. பல்கலைக் கழகத்தினர் எங்களை தொடர்பு கொண்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று தெரிவித்ததாக அந்த மாணவர் கூறினார்.
இந்திய தூதரகம் பல்கலைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் உள்ள உண்மையை கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளது. அநத நிறுவன உரிமையாளரை இந்த பிரச்சனையை மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி தீர்த்து வைக்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஒரு இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிரச்சனைக்குறிய நிறுவனத்தில் பதிவு செய்துள்ள மாணவர் ஒருவர் தான் செலுத்திய கட்டண ரசீதை சமர்ப்பித்த போது தான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது என்று கூறியிருந்தார்.
கேம்பஸ் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட்டை நடத்தி வருபவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.