உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பு - பிரதிபா பாட்டீல் 19ம் தேதி கோவை வருகை
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஜூன் 19 ம் தேதி கோவை வருகிறார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27 ம் தேதி வரை கோவையில் நடக்கிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என, பல லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
ஜூன் 23 ம் தேதி, அலங்கார ஊர்திகளுடன் மாநாட்டுப் பேரணி வ.உ.சி., மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு துவங்கி, பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாகத்தை அடைகிறது. அங்கு மேடையில் முக்கிய தலைவர்கள் பேரணியை பார்வையிடுகின்றனர்.
மாநாட்டை பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். இதற்காக அவர் 19 ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானத்தில் கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி சென்று, ராஜ்பவனில் தங்குகிறார்.
இரண்டு நாள் ஓய்வுக்கு பின்பு, ஜூன் 22 ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து காரில் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். மறுநாள் (ஜூன் 23) மாலை நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்
மாநாடு நிறைவு நாளான 27 ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோர் வருகை தர உள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி கோவை மாவட்டத்தை போலீசார் தங்களது வசம் கொண்டுவந்துள்ளனர்.
மாநாட்டு பணிகள் ஜூன் -15 க்குள் நிறைவுபெறும் - அன்பழகன்
இதற்கிடையே, செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் ஜூன் - 15 ம் தேதிக்குள் நிறைவு பெறும் என நிதி அமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மரக்கன்று நடும் விழா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்லும் சாலையோரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.
கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டு கண்காட்சி அரங்குகள், மாநாட்டுப்பந்தல் ஆய்வரங்கங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவையில் பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டன. மீண்டும் சாலையோரங்களில் மரம் வளர்ப்பதற்காக கோவை முழுவதும் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் இந்த செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக நடப்படும்.
அடுத்து செம்மொழி மாநாட்டு ஆயத்தப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் பார்க்கக்கூடிய கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக செம்மொழி மாநாட்டு அரங்கில் பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு செம்மொழி மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். முதல்வர் மற்றும் முக்கிய பிர முகர்கள் மேடையில் உரையாற்றுவதை அனைவரும் பார்க்கும் வகையில் பெரிய திரை கொண்ட 50 டி.வி.க்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் சுமார் 120 பேர்வரை அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி அனைத்துப் பணிகளும் வருகிற 15 ம் தேதிக்குள் முடிவடையும் என்றார்.