ப்ளம் கேக், ஒயினுடன் சுவையான கிருஸ்துமஸ் விருந்து
கிருஸ்துமஸ் விருந்து
கிறிஸ்மஸ் விருந்துக்காக பத்து தினங்களுக்கு முன்பிருந்தே இனிப்பு, காரம் என விதவிதமாகத் தயாரிக்கத் துவங்கி விடுகின்றனர் கிருஸ்துவ மக்கள். பழ கேக்குகள், பிளம் புட்டிங், மைதாமாவு, சர்க்கரையோடு முட்டை சேர்த்து செய்யப்பட்ட டைமண்ட் கட்டிங் இனிப்பு, பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வகையான இனிப்புகள், இவற்றோடு காரமும் களைகட்டும்.
சுவையான மாமிச உணவு
ஆடு,கோழி, வான்கோழி போன்றவைகளின் மாமிசங்களில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவுகள் வரிசைகட்டி நிற்கும். பிரியாணி, சிக்கன் சாப்ஸ் மட்டன் வறுவலோடு வெங்காயப்பச்சடியும் விருந்தில் இடம்பெறும். சைவ உணவு வேண்டுபவர்களுக்கு உருளைக்கிழங்கு, காய்கறிகள் என விதவிதமான வகைகளைச் செய்து அசத்தி விடுவார்கள். அதோடு சுவையான ஒயினும் பரிமாறப்படுகிறது.
திகட்ட வைக்கும் ப்ளம் கேக்
பரம்பரை பரம்பரையாக விருந்தில் இடம்பெற்று வருவது "பிளம் புட்டிங்" எனப்படும் கூழ் உணவு! இது சுட் எனப்படும் ஒருவித மிருகக் கொழுப்பு, கோதுமை மாவு, கிசுமிசுப்பழம், முந்திரி,வால்நட் போன்ற பருப்புகளோடு நறுமணம் மிக்க மசாலா பொருட்கள் சேர்த்து துணியிலிட்டு வேடுகட்டி அவித்தால் நன்றாக உப்பி வந்திருக்கும். அதை சிறு துண்டுகளாக்கி அதன் மேல் கிரீம் போட்டு தயாரிக்கப்படுவதுதான் "பிளம் புட்டிங்"! நாவின் சுவை நரம்புகளை தூண்டிவிட்டு இந்த ப்ளம் கேக் இன்றி கிருஸ்துமஸ் விருந்து இல்லை எனலாம்.
நறுமணம் கமழும் ஒயின்
பழங்காலத்தில் மக்கள் சந்தோஷமான நிகழ்வு, மதச்சடங்குகள், திருமண விழா, பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளில் தங்கள் உணர்வுகளைக் கொண்டாட பானம் அருந்தினர். இது ஒரு சமூக பழக்கமாகவே இருந்தது. இந்த நடைமுறை காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான பானம் அருந்துகின்றனர்.
கிரேக்கர்கள், ரோமானியர்கள் போன்றவர்கள் தங்களின் கடவுளைத் தொழுவதற்கு ஒயின் அருந்துவதை ஒரு சடங்காகவே கொண்டாடினர். துக்ககரமான நிகழ்விலும், குடும்ப விழாக்களிலும் ஒயின் அருந்தி மகிழ்ந்தனர். இது பற்றி, பைபிள் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.
அராரத் மலையில் வந்து தங்கிய நோவா, அங்கு திராட்சைக் கொடியினை நட்டு வளர்த்து, திராட்சை பழம் பறித்து, அதனை புளிக்கச் செய்து, அந்த பானத்தைக் குடித்தாராம். இந்த பாரம்பரிய வழக்கப்படியே இன்றைக்கும் கிருஸ்துவமக்கள் கிருஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளில் ஒயின் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தின் முன்தினம் இரவில் தொடங்கி விடிய விடிய வான வேடிக்கைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும். அன்றைய தினம் தேவாலயங்களுக்குச் செல்வதும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை கூறியும், சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பராம்பரியமாக கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றால் மிகையில்லை.