துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் ராஜமுத்திரை
துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் ஏப்ரல் மாத நிகழ்ச்சியான சித்திரையில் ராஜமுத்திரை கடந்த 22-ம் தேதி இந்தியா கிளப்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ராஜா, ராணி, அமைச்சர்கள் குழு அடங்கிய அமைச்சரவை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மேடையில் ஏற தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ராஜகுரு கர வருட சிறப்புகளைக் கூற அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் துவங்கின.
ராஜா, ராணி, ராஜகுரு, ஆஸ்தானக் கவி, படைத் தளபதி, அமைச்சர்கள் என அவர்கள் செய்திருந்த ஆடை அலங்காரம் 14,15-ம் நூற்றாண்டுகளை நினைவூட்டியது. சங்கத்தமிழ் வணக்கமாக அஞ்சனா கணேஷ் பரதநாட்டியம் ஆடினார்.
உஷா கிருஷ்ணனின் வடிவமைப்பில் குழந்தைகள் மாறுவேடச்சுற்றில் ஜான்சிராணி, மதுரை மீனாட்சி, பீம், அபிமன்யு, மைசூர் அரண்மனை சமையல்காரன், பிரகலாத், நக்கீரன், தெனாலி என்று அசத்தினர்.
பத்மபிரியா பிரகாஷ் ராஜசபையில் அரசர் முன்னிலையில் 60, 70 களில் வந்த சிறப்புமிக்க குறிப்பாக சபாஷ் சரியான போட்டி போன்ற பாடல்களுக்கு 9 குழந்தைகள் ஆடிய நடனம் அருமை.
வாழ்க்கை வசந்தமே என்ற தெனாலிராமன் கதைக்கு வசனமெழுதி 10 குழந்தைகளை வைத்து இயக்கி அனைவரின் பாராட்டையும் தட்டிச் சென்றார் துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன்.
ஸ்ரீரங்கநாச்சியார் அசோக்குமார் வடிவமைப்பில் சகுந்தலம் சகுந்தலை கதை, ராதா தியாகராஜன், ஸ்ரீராமா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் சிந்தனையில் தூதுப்பாடல்கள், மந்திரிசபை ஆலோசனைக்கூட்டம் உள்ளிட்டவை உறுப்பினர்களின் வரவேற்பைப் பெற்றன.
ஹரிணிமுரளி, அனிருத்முரளி, ஸ்ரீசான் கணேஷ் ஆகியோர் குறள் சொல்லி விளக்கம் தந்தனர். சுஜாதா விஸ்வநாதனின் முத்தமிழ் கவிதையும், மீனாகுமாரி பத்மநாதனின் ஆசை ஐந்திணை ஆசை கவிதையும் ரசிக்க வைத்தன.
மார்ச் மாதத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சித்ரா ராகவன் பரிசுகளை வழங்கினார். சங்ககாலம் என்றதால் பிரேமா ஸ்ரீனிவாசன் தேனும், திணைமாவும் கொண்டு வந்து அசத்தினார்.
பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்க அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது. செயலாளர் காயத்ரி சந்திரசேகர் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு அல்ரவாபி அனுசரனை வழங்கியதோடு அனைவருக்கும் பழரசம் வழங்கினர்.