சவூதியில் நடந்த மாபெரும் மருத்துவ முகாம்: தமுமுக ஏற்பாடு
சவூதி: சவூதி அரேபியாவின் அல் கோபார் நகரில் ரஃபா மருத்துவமனையும், தமுமுகவும் இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ முகாம் கடந்த 16ம் தேதி நடந்தது.
இந்த முகாமின் துவக்க விழாவுக்கு ரஃபா மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் ஜனாப். முஹம்மது குட்டி மற்றும் மருத்துவர் டிக்ஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக ஜுபைல் மாநகர கிளை தலைவர் மவ்லவி. ஷெரீப் பாகவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மருத்துவ சேவைகள் குறித்து உரை நிகழ்த்தினார்.
தமுமுக அல்கோபார் கிளையின் தர்பியா பொறுப்பாளர் நஸ்ருத்தீன் அய்யூப் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் ஜனாப். முஹம்மது குட்டி மருத்துவ முகாமின் அவசியம் குறித்து பேசினார். மனிதர்களுக்கு தரமான மருத்துவம் அளிப்பதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் டிக்ஸன், பொதுவாக ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மருத்துவ விழிப்புணர்வு குறித்தும், வளைகுடா வாழ் தென்னிந்தியர்கள் சந்திக்கும் உடற்கூறு பிரச்சனைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் அங்கு கூடியிருந்த சுமார் 75 பேரிடம் கலந்துரையாடல் நடத்தி, அவர்களின் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
தமுமுக அல்கோபார் கிளை செயலாள்ர் ஹாஜா பஷீரின் சுருக்கமான நன்றியுரையுடன் துவக்க விழா இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற சாதாரண சோதனைகள் மட்டுமல்லாமல் கண் பரிசோதனை, பல் மருத்துவம், நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தவிர மகளிருக்கான நோய்கள் தொடர்பாக பெண் மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனையும், மருத்துவமும் வழங்கப்பட்டன. முகாமில் சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டு பயனடைந்தனர்.