துபாயில் தமிழ்த்தேர் ‘நிழலும் நிஜமும்’ கவிதைச் சிறப்பிதழ் வெளியீடு
துபாய்: துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாத இதழான தமிழ்த்தேரின் சித்திரை மாத சிறப்பிதழான 'நிழலும் நிஜமும்" வெளியீடு மற்றும் கவியரங்கம் கராமா சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் கடந்த 15-ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் துவக்கமாக செல்வி. நிவேதிதா மற்றும் திருமதி. ஜெயா பழனி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இந்த நிகழச்சியை அமைப்பின் ஆலோசகர் மற்றும் தமிழ்த்தேர் ஆசிரியர் காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார். முத்துப்பேட்டை ஷர்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கவியரங்கத்தை செல்வி. நிவேதிதா மற்றும் திருமதி. ஜெயா பழனி ஆகியோர் திறம்பட நடத்தினர். காவிரிமைந்தன், சந்திரசேகர், ஜெயராமன் ஆனந்தி, ஒகளுர் நிலவன், இரஜகை நிலவன், துரை.மலைவேல், சரவணன், செய்யது உசேன், ஜியாவுத்தீன், திருமதி. மலீக்கா ஃபாரூக், குப்புசாமி ரமணி ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கி அவையோரின் பாராட்டைப் பெற்றனர்.
வடிவரசன் (எ) திருநாவுக்கரசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்தேர் நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதைத் தெரிவித்து, தலைப்புக்கேற்ற ஹைக்கூ கவிதையொன்றை கூறி அவையோரின் பாராட்டைப் பெற்றார்.
கவிஞர் திரு.செய்யது உசேன் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற நிகழ்வை பாராட்டும் விதமாக எழுதிய கவிதையை வாசித்ததோடு மட்டுமின்றி அதையே பிரபல திரைப்படப் பாடலின் மெட்டில் பாடியும் காட்டினார்.
முத்துப்பேட்டை ஷர்புதீன் அவர்கள் தமிழகத்தில் தமிழ் மறக்கப்பட்டு வருவதை, தன் தெருவில் நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் மூலம் விளக்கி, எப்போதும் தமிழில் உரையாட வேண்டிய கட்டாயத்தை விளக்கினார்.
கவியரங்கத் தலைவியர் இருவரும் இறுதியாகத் தங்கள் கவிதைகளை வாசித்து நிறைவு செய்தனர். செல்வி. நிவேதிதாவுக்கு அமைப்பின் சார்பில் அவர் தந்தை திரு.ஆனந்தன் பொன்னாடை போர்த்தியும், திருமதி.ஸ்ரீவாணி ஆனந்தன் நினைவுப்பரிசு வழங்கியும் கௌரவித்தனர். திருமதி. ஜெயா பழனிக்கு அமைப்பின் சார்பாக அவரது கணவர் திரு.ஆதி பழனியும், கவிதாயினி திருமதி.மலீக்கா ஃபாரூக்கும் நினைவுப் பரிசை வழங்கினர்.
அடுத்து தமிழ்த்தேர் சித்திரை மாத 'நிழலும் நிஜமும்" சிறப்பிதழ் வெளியீடு நடைபெற்றது. முதல் இதழை திரு.திருநாவுக்கரசு வெளியிட திரு.செய்யது ஹுசைன் பெற்றுக்கொண்டார். இரண்டாவது இதழை திரு. முதுவை ஹிதாயத் வெளியிட திரு.சரவணன் பெற்றுக்கொண்டார். மூன்றாவது இதழை திருமதி. இராஜேஸ்வரி ரமணி வெளியிட திருமதி.மலீக்கா ஃபாரூக் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பினை திரு.துரை மலைவேல் அவர்கள் செய்திருந்தார்.
இறுதியாக வானலை வளர்தமிழின் ஐந்தாம் ஆண்டு விழா வருகின்ற மே மாதம் 27-ம் தேதியும், அடுத்த மாதாந்திர இதழ் 'ஜனநாயகம்" சிறப்பிதழ் வெளியீடு மே மாதம் 6-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வானலை வளர்தமிழ் இணைச் செயலாளர் மற்றும் தமிழ்த்தேர் பொறுப்பாசிரியர் திரு.ஜியாவுத்தீன் நன்றியுரை கூறினார். வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் வழக்கம்போல் இடமும் உணவும் அளித்திருந்தார்.
இதில் வானலை வளர்தமிழ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.