பாகிஸ்தானில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலை புதுப்பிக்கும் பணி துவங்கி உள்ளது. இதன் பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் பக்தர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஜாம்ஷெட் டவுனை அடுத்த சோல்ஜர் பஜார் என்ற இடத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. ஸ்ரீ பஞ்சமுக்தி ஹனுமன் மந்திர் என்ற இக்கோவில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் கோவிலை சுற்றிலும் இருந்தவர்கள் கோவில் நிலத்தை அபகரித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள 8 அடி உயரம் உள்ள ஹனுமன் சிலை மூலம் இந்துக்கள் மத்தியில் கோவில் பிரபலமானது. இந்நிலையில் கோவில் அருகே வசிக்கும் மக்கள் இங்கு வந்து வணங்க ஆரம்பித்தனர்.
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவிலை புதுப்பிக்கும் பணியை துவங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு நிதியின்மை பெரும் தடையாக இருந்தது. மேலும் கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவில் நிர்வாகம், சிலரிடம் இருந்த அபகரிப்பு நிலங்ளை மீட்டுள்ளது. மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது குறித்து கோவில் பொறுப்பாளர் ஸ்ரீராம்நாத் மஹராஜ் கூறியதாவது,
கோவிலை புதுப்பிக்கும் பணி அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நிதி குறைபாடு மற்றும் தடையாக இருந்த ஆக்கிரமிரப்புகள் தற்போது மெதுவாக அகன்று வருகின்றன. உலகிலேயே இக்கோவிலில் மட்டுமே இயற்கையாக உருவான பகவான் சிலை உள்ளது. இங்குள்ள சிலை மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல.
கோவிலில் உள்ள பழமையான பளிங்கு கற்களை அதன் தன்மை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அதிக செலவு மற்றும் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. கோவிலை புதுப்பிக்க ரூ.45 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பாதி பணம் எங்களுக்கு கிடைத்துவிட்டது. மீதமுள்ள பணத்தை திரட்டுவதற்காக காத்திருக்கிறோம். இதற்காக கோவிலின் முன்பாக காணிக்கை அளிக்குமாறு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கோவிலை புதுப்பிக்கும் முயற்சி வெற்றிப் பெற்றால் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். அதன்பிறகு கோவில் அருகே விடுதிகள் மற்றும் காலணிகள் வைக்க தனி பகுதிகள் ஒதுக்கப்படும் என்றார்.
கோவில் கட்டுமான பணிக்காக ஏழை இந்துக்கள் மற்றும் முட்டாஹிதா குவாமி இயக்கம் ஆகியோரிடம் உதவிகள், நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கோவிலின் மூலஸ்தானம் தவிர மடைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications