தினமும் இந்தியாவில் 4,700 குழந்தைகள் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி
டெல்லி: நாடுமுழுவதும் 5 வயதுக்குட்பட்ட 4,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு காரணங்களால்,தினமும் இறப்பதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
"வேல்ட் விஷன் இந்தியா' எனும் தன்னார்வ நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.
ஒரு நாட்டில், மக்கள் மருத்துவத்துக்காக செய்யும் செலவு, அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதிகள்,அவர்களின் வாழ்வியல் எதிர்பார்ப்பு, இனப்பெருக்க விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு உலகளவில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன.
135 வது இடம்
குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில்,176 நாடுகளில்,இந்தியா 135 இடத்தில் உள்ளது.
குறைவான மருத்துவர்கள்
இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு, 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.
அதிக மருத்துவ செலவு
இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவீதத்தை, மருத்துவத்துக்காக செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
டீன் ஏஜ் தாய்மார்கள்
1,000 பெண்களில் 86 பேர் வரை, 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
ஏழை பணக்காரன் இடைவெளி
மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளது. பிரான்ஸ்,டென்மார்க், நார்வே,லக்சம்பர்க், பின்லாந்து ஆகிய நாடுகளில் இந்த இடைவெளி குறைவாக உள்ளது என,அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.