குவைத்தில் நடந்த இந்திய சுதந்திர தின சிறப்புக் கூட்டம்: பாவேந்தர் கழகம் ஏற்பாடு
குவைத்: குவைத் பாவேந்தர் கழகம் நடத்திய களம் பதினொன்று சுதந்திர தின சிறப்புக் களமாக கடந்த 2ம் தேதி மாலை 06.00 மணிக்கு மங்காப் பாவேந்தர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையேற்க திரு.கவிசேய் சேகர் மற்றும் திரு.ப.சேகர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சியினை திரு.ஜெய்குமார் தொகுத்து வழங்கினார்.
தமிழ் வணங்கு நிகழ்வில் செல்வி. சுபஸ்ரீ, திருமதி. அம்பிகா ஆகியோர் பாடினர். குறளோடு உறவாடு திரு.சிவமணி, களப்பாடல் திரு.இராவணன், கதைகேளு கனியாகு நிகழ்வில் திரு.சூரஜ்குமார், மண்ணிசையில் திருமதி.மஞ்சுளா ஆகியோர் பங்கு பெற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து நடந்த களத்துமேடு நிகழ்வில் சுபஸ்ரீ, சஞ்சீவ் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி அனைவரது கைதட்டல்களை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் சுதந்திரப் போரின் சூறாவளிகள் என்ற தலைப்பில் வீரத்தின் மறு பெயர் நேதாஜி என்று திரு. நடராஜன் அவர்களும், தியாக தீபம் தில்லையாடி வள்ளியம்மை என்று திருமதி. புனிதா அவர்களும், மறத்தமிழன் வ.உ.சி பற்றி திரு.ப.சேகர் அவர்களும் வீர உரையாற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். திரு.சேந்தை ரவீந்தர் இம்மாதம் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் கழக உறுப்பினர்களுக்கு வாழ்த்தினையும், கொடையாளர்களுக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

பின்னர் நடந்த கவிதைச்சிறகு நிகழ்வில் பாரின் பார்வையில் தாயின் பிள்ளைகள் என்ற தலைப்பில் திரு. சிவமணி அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அரசு தொட்டில் குழந்தைகள் பற்றி திரு. தண்டாயுதபாணியும், திருநங்கைகள் பற்றி திரு.சுப்பிரமணியும், எய்ட்ஸ் நோயாளிகள் பற்றி திரு.முனு. சிவசங்கரனும் மனதை தொடும் கவிதைகள் படித்து மெய்சிலிர்க்க வைத்தார்கள்.

இனிதினும் இனிது நிகழ்வில் எண்ணுவதை எல்லாம் எழுதும் கவிஞர்கள் குற்றவாளியே! என்ற தலைப்பில் திரு. இராவணன் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. குற்றவாளியே! என்று திரு.மகேஷ் அவர்களும், நிரபராதியே! என்று திருமதி. தேவிரவி அவர்களும் மிகவும் சுவையாக அனைவரும் ரசிக்கும் வகையிலும் வாதிட்டார்கள்..
வாழிய செந்தமிழுடன் களம் நிறைவடைந்தது. அமுதீதல் நிகழ்வில் திரு. சூரஜ்குமார் இரவு உணவு வழங்கி சிறப்பு செய்தார்.












Click it and Unblock the Notifications