இன்று உலக கல்லீரல் தினம்..!
சென்னை: ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினமாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப் படுகிறது.
இப்போது மக்களுக்கும் மற்றும் உடல்பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கும் கூட கல்லீரல்மற்றும் அதன் நோய்கள் பற்றிய தகவலையும், எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது, என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.
எம் பேரு கல்லிரல்பா.!
நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். இது ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூட கூறலாம். ஏன் தெரியுமா? உடலின் முக்கியமான 500 வேலைகளைச் செய்கிறது.
35, 000 பணிகள் தேவைக்கு ஏத்தாப்பல செய்யுதாம்..!
இப்படிதான் மொத்தமாக கல்லீரல் சுமாராக 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறதாம். இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..!
20% கல்லீரல் போதுங்க...
இதன் மீள் வளர்ச்சி என்பதும், நாம் எதிர்பார்க்காத வகையில் அனாயசமானது. இதன் 80 % சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல் .
வெட்ட, வெட்ட வளருவேன்...
அதுபோலவே, 80 % வெட்டி வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்து விடுவார். இதன் மீள்திறனும் , தாக்குப் பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான்.
மூளை மாதிரி தான்...
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போ தான். கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள். அதாவது 1400 கிராம்..!
கொழுக், மொழுக் கல்லீரல்...
இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது. வலது பகுதி, இடதை விடப் பெரியது.
பெரிய பேக்டரி...
நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிசாலையும் கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும் , தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது கல்லீரல்தான்.
சேமிப்புக் களன்...
அது மட்டுமல்ல நாம் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக் கொடுப்பவரும் கல்லீரலார் தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிளைகோஜனாக சேமித்து வைக்கப் படுவதும் இங்கேதான். அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில் தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம் செய்வதும் இவர்தான்.
குளுக்கோஸ்...
நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல் தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால், நீங்கள் அம்பேல்தான்.
வெளியே தள்ளீடுவேன்...
உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன் இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல், உடனடியாக வெளித் தள்ளுவது கல்லிரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும், அவற்றை வெளியே கொட்டும் வேலையைச் செய்வது இவர்தான்.
பிரிச்சு, கரைச்சு, மேஞ்சுடுவேன்...
நம் உடலுக்கு வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற உதவுகிறது . கல்லீரல் மருந்து, மாத்திரை, வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்கா விட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.
வறுவல் சாப்பிட்டா...
எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது இவர்தான். இதிலுள்ள பித்தப் பையின் சுரப்பி நீரான, பித்தநீர் தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து சீரணம் செய்பவர்
பாலைக் குறைக்கணும்...
மஞ்சள் காமாலை வந்தால், மருத்துவர் உடனடியாக, பால் பொருள்கள், எண்ணெய் வஸ்துக்களை நிறுத்தச் சொல்கிறார். ஏனெனில் மஞ்சள் காமாலை, என்பது ஹெபடிடிஸ்(Hepatitis) A, B & C போன்ற வைரஸ்களால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவது.
வைட்டமின் சேமிப்பு கிடங்கு...
கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ அமிலங்களாக மாற்றித் தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E & K யின் சேமிப்பு கிடங்கு இதுதான்...!
பிரிச்சு ஆராயும்...
கொலஸ்டிராலின் உற்பத்திக் கலனும்/களனும் இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!
நீர் தான் ஆதாரம்...
கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது. இதன் மீள் திறனும், பணிப் பளுவும் அளப்பரியது.
விழிப்புணர்வு வேண்டும்....
நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க வேண்டியது மிக மிக அவசியம்.
வைரஸ் பாதிப்பு...
உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும், நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும். இதனைக் கண்டறிவது எளிதே.! சில வைரஸ் பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ் (cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று , மன அழுத்தம், உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும். சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல் உருவாக வழி வகுக்கும்.
கல்லீரல் மாற்று...
பாதிக்கப் பட்ட கல்லீரலை, கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும்
குறைந்த வயதில்...
997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது .
சிரோசிசால் மரணம்...
அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25 ,௦௦௦000. இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு:2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009ல் 2 ,048 என உயர்ந்த வண்ணமே உள்ளது. இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர் எத்தனை பேரோ..?