ஸ்ரீகாய்சினவேந்தன் பெருமாள்-திருபுளியங்குடி
நலம்தரும் ஆலயங்கள் வரிசையில் இன்று நாம் தரிசிக்கவிருப்பது நவதிருப்பதிகளில் ஒன்றான திருப்புளியங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகாய்சினவேந்தன் பெருமாள் ஆலயம். இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் இது. நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக இது வழிபடப்படுகிறது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம் ஆகும்.
திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்
ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் பூமி பாலகப் பெருமாள் காட்சி தருகிறார்.
புஜங்க சயனம் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். மலர் மகள் நாச்சியார், பூ மகள் நாச்சியார் என்ற தாயார் திரு உருவங்கள் பெரியதாக இருக்கின்றன. புளியங்குடி வல்லி என்ற உற்வச தாயாரும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாளின் பாதங்களை வெளிப்பிரகாரத்தில் இருந்து ஒரு ஜன்னல் வழியாக பார்க்க வேண்டும்.
தோஷம் நீக்கும் தலம்
இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கின தலம் இது. வசிஷ்ட புத்திரர்களால் சபிக்கப்பட்ட ஒருவர் சாப விமோசனம் பெற்ற திருப்பதி இது. வேதம் மணக்கும் நாவால், நம்மாழ்வார் இந்த காசின வேந்தனை பாடி பரவியிருக்கிறார்.
தலவரலாறு:
ஸ்ரீமந் நாராயணன் ஒருமுறை திருமகளோடு தனித்து உலாவருவதை கண்ட பூமி தேவி கோபம் கொண்டு பாதாள உலகத்திற்கு சென்றாள்.
உடனே திருமாலும் ஸ்ரீதேவியும் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.
பாதாள லோகம் சென்ற களைப்பு தீர பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் இருக்க பாதங்களின் அருகில் தேவியர் இருவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். பூமிதேவிக்கு அருளியதால் பூமிபாலன சேத்திரம் என்னும் பெயர் வழங்குதலாயிற்று. பெருமாளுக்கு காசினி வேந்தர் என்னும் பெயர் உண்டாயிற்று. பின்னர் மருவிக் காய்சினவேந்தர் ஆயிற்று.
சாபவிமோசனம்
வருணன், நிருதி, தருமராஜன் ஆகியோர் பெருமாளை வழிபட்டு பேறு பெற்றனர். வசிஷ்டரின் மகனான சக்தி முனிவரை யக்ஞசர்மா என்பவர் சரியான மரியாதை கொடுக்காமல் போனதால் சக்தி முனிவர் அவரை அரக்கனாக மாற சாபமிட்டார். பிறகு இந்த சாப விமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார்.
இந்திரன் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்வதற்கு வருவான்.
அப்போது அதை நீ கெடுக்க முற்படுவாய். அப்போது திருமால் தன் கதையினால் உனக்கு சாப விமோசனம் தருவார் என்றார் சக்தி முனிவர். சக்தி முனிவர் சொன்னபடியே பின்னொரு சமயம் இந்திரன் இங்கு யாகம் செய்ய முற்படும் போது அரக்கனாக மாறியிருந்த யக்ஞசர்மா அதை கெடுக்க முற்பட அப்போது அங்கு தோன்றிய திருமால் தன் கதையால் அரக்கனை அடிக்க - யக்ஞசர்மா, அரக்க சாபத்தில் இருந்து விடுதலை பெற்றார்.
கல்வி வளம் பெருக
இந்த கோவிலில் பெருமாளின் திருவடியில் இருந்து தாமரை கொடி தனியாக கிளம்பி சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரை மலரோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியை இப்போதும் காணலாம். பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, நீராஞ்சன விளக்கேற்றி (பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் நெய்யூற்றி விளக்கேற்றுதல்) வழிபட்டால், திருமணத் தடை அகலும்; பச்சைப் பயறு தானம் செய்தால், கல்வியும் ஞானமும் கைகூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி
பெரியவர்கள் இட்ட சாபத்தில் இருந்து விலகவும், கோபத்தினால் நல்லோரை விட்டு விலகி அவதிப்படுவது விலகவும், குடும்ப பிரச்சினை அதிக அளவுக்கு சென்றுவிடாமல் தடுக்கவும், உற்றார், உறவினர்கள் தொடர்ந்து அன்பு காட்டவும், குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடந்து மகிழ்ச்சியை உண்டு பண்ணவும் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை பிரார்த்தனை செய்தாலே போதும்.
திருக்கோவில் அமைவிடம்
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி - 628 621 தூத்துக்குடி மாவட்டம்.
நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பேருந்தில் சென்று தரிசிக்கலாம். வரகுணமங்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து - 32 கி.மீ., அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.
மூலவர்: பூமிபாலகர்
உற்சவர்: காய்சினவேந்தன்
தாயார்: மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வள்ளி
புராணப்பெயர்: திருப்புளியங்குடி
சிறப்பு: தோஷம் நீக்கும் தலம்