ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ஓஹியோ மாகாணத்தில் 21ஆம் தேதி மொய் விருந்து..!
ஓஹியோ மாகாணத்தில் வரும் 21ஆம் தேதி மொய் விருந்து நடத்தப்பட உள்ளது,
கொலம்பஸ்: ஓஹியோ மாகாணத்தில் வரும் 21ஆம் தேதி அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் மொய் விருந்து நடத்தப்பட உள்ளது.
'உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் உலகுக்கே நமது செம்மொழியின் அருமை புரியும்' என அமெரிக்காவாழ் தமிழர் வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு, அதற்கான முயற்சியில் களம் இறங்கினார் மருத்துவர்.ஜானகிராமன். இதனையடுத்து, இவரும் மருத்துவர் ஞானசம்பந்தம் ஆகியோர் இணைந்து தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்து தமிழ் இருக்கை முயற்சியைத் தொடங்கிவைத்தனர்.
இதற்காக, அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியுள்ளனர். இதன் தலைவராக மருத்துவர்.ஜானகிராமன் இருக்கிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் பேராசியர்களும் தன்னார்வலர்களாகப் பல இளைஞர்களும் இப்போது இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
மென்பொறியாளர் வெற்றிச்செல்வன் உலகளவிலான ஒருங்கிணைப்புகளைச் செய்து வருகிறார். தமிழுக்காக நடக்கும் முயற்சிகளை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் சிலர், இந்த முயற்சிகளை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் சென்றார்கள்.
இதன் பயனாக பத்து கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு. தமிழ் இருக்கைக்கான 90 சதவிகித வேலைகள் முடிந்து, தேவையான 60 லட்சம் டாலரில் 54 லட்சம் டாலர்களைப் பெற்ற நிலையில், இன்னும் தேவைப்படும் 6 லட்சம் டாலர்கள் இலக்கினை அடைய, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் தமிழ் மொழியை பின்பற்றி அவர்களை ஊக்குவிக்க, ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த கொலம்பஸ், மரிஸ்வில், டேட்டன், மற்றும் கிளிவ்லேன்ட் நகரில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதி மொய் விருந்து மற்றும் கலந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் நிதியானது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது. மேலும் மொய்விருந்து நடத்தப்படும் நாளில் உறியடி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.