வரும் சனிக்கிழமை வள்ளலார் விழா.. வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஏற்பாடு!
சான்ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும், வள்ளலார் யுனிவர்சல் மிஷனும் இணைந்து கலிஃபோர்னியாவில் வள்ளலார் விழாவை நடத்த உள்ளார்கள்.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு, குப்பர்டினோ சமுதாயக் கூடத்தில் (Cupertino Community Hall) இந்த விழா நடைபெறுகிறது. குப்பர்டினோ மேயர் சவீதா வைத்யாநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
யோகி ஸ்டீவன், டி.ஆர். சந்திரசேகர், துரை சாதனன், தில்லை குமரன், கீதாநிதி ஜெயபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். ஜி.ஆத்மநாதன் மற்றும் மாணவர்கள் பங்கேற்பில் திருஅருட்பா இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதற்காக வளைகுடாப் பகுதி குழந்தைகளுக்கு, வள்ளலார் பாடிய அருட்பாக்களைக் சொல்லிக்கொடுத்து ஜி.ஆத்மநாதன் இசைப் பட்டறையும் நடத்தியுள்ளார்
சிவனடியார் என்றாலும் வள்ளலார் பெரும் தமிழறிஞரும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று மனிதநேயம் மிக்கவர்.அவரது சிந்தனைகளைப் பாடல்களாக்கித் தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்தவர்.
சாதி மதங்களை, மூட நம்பிக்கைகளை மறுத்தவர்.
வரும் சனிக்கிழமை வள்ளலார் விழா.. வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஏற்பாடு! https://t.co/xV9S5tfjfT pic.twitter.com/yj756JHS3t
— Oneindia Tamil (@thatsTamil) August 4, 2017
பெரியாருக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பு 1823-ல் பிறந்த வள்ளலார் தான் தமிழகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடி ஆவார். வள்ளலாரின் சிந்தனைகளை தற்போதைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் முயற்சியாக இந்த விழா நடைபெறுகிறது. அமெரிக்க மண்ணில் வள்ளலாரின் சமூக சிந்தனைகள் அலசப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சான்ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும், வள்ளலார் யுனிவர்சல் மிஷனும் இணைந்து செய்து வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இர தினகர்