அலை கடலே!
உன்னோடு ஓடி வந்து நீ
கால் நனைக்க மனம்
சிலிர்த்து நாம்
நின்ற காலங்கள்!.
இனி!.....
கனவிலேனும் உன்
கரையில் உன் மடியில்
கால் பதிக்க மனம்
வருமா?
உண்ண மீனும்
உனக்குள்
இருந்து,
உணவில் எல்லாம்
உப்பாயிருந்து,
முத்தென்ற
சொத்தாயிருந்த நீதானா?
எம் சொந்தங்களின்
உயிர் குடித்துப்போனது?
"கடல் எமக்கான வளம்
என்றோமே! எம் பலம்
குறைத்து, ஏன் தாயே
பழி சுமந்தாய்? ஏன்
பொங்கி நீ எழுந்தாய்?
எந்த சித்தார்த்தனை
புத்தனாக்கும் முயற்சி
இது?
இந்து சமுத்திர நித்திலம்
இன்று சித்தம் கலங்கி
தவிக்கிறதே! நான்கு
திசையிலும் அரணாயிருந்து
அரவணைத்த நீதானா!
எமை அழவைத்து
போனது?
சுனாமி!..
எங்கள் தேசமே
கேட்டறியாத பெயர்
-உன் பெயர் பொறிக்க
எங்கள் உயிர் முத்துக்களையா
உள்வாங்கி போவது?
"தன் எல்லை கடந்து
அழித்து சென்றால்
அவப்பெயரே மிஞ்சும்"
யாருக்கு உணர்த்த
எங்கள் உறவுகளின் உயிர்
பறித்தாய்?
மனிதன் யாருமிங்கு
மனிதனாய் இல்லை என்று
மதம் பிடித்த யானைபோல்
ஆனாயா நீ!?
நீ கூட அப்பாவிகளை
அழித்தால்.... நியாயமா?
புரியவில்லை!
"நிலம் நடுங்கும்
நீர் பொங்கும்" கலியின்
ஆரம்ப அடையாளமா?
தெரியவில்லை!....
ஆனாலும் கடல்தாயே!...
நீ பிரசவித்து சென்றது எம்
உறவுகளின் இறப்பை
மட்டுமல்ல!
ஈழத்தமிழர்
எம் உணர்வுகளின் நெருப்பை!...
மீனா செல்வரத்தினம்.
ஒட்டாவா.
கனடா