நினைவுகளில் தொலைதல்
ஆழ்கடலின் அலைகரையில்,
வெதுவெதுப்பு வெண்மணலில்
கால் புதையக்
கால்புதைய
நடக்கின்றேன்.
ஊர்..
நினைவுகளில் என்னைத்
தொலைக்கிறேன்.
நீலக் கடல்
நீண்டு..
தொலைதூரத்
தொடுவானத்தின் கீழ்,
வீற்றிருக்கக் கூடும்
எனதருமைச்
சிற்றூர்.
குமுறும் அலைகடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசை..
எனது பெருமூச்சுகளை
கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடும்
அடிக்கடி
கடற்கரையில்
சிப்பி பொறுக்கிய
அறியாச் சிறுவனை
இன்றளவும்
கடல்
நினைவில்
இருத்தக் கூடும்.
காற்று வீசையில்
கலந்து செல்லும்
என் மணத்தை
கரையோரத் தென்னைமரம்
கண்டுபிடிக்கக் கூடும்.
வெண்பனிபோல் கரையும்
வெண்மேகமூட்டம்
என்னூர் போகும்வழி
கடல் குடித்துக்
கருமையாகி
மழையாக
வழியக்கூடும்.
கண்ணின்று வீழும்
துளிகளில்
சில துளிகள்
அலையூடு போய்
என்னூரில் சேரக்கூடும்.
நினைவுகளின் மகிழ்வில்
சுரக்கிறது கண்ணீர்!
ஆழ்கடலின் அலைகரையில்
நினைவுகளில்
என்னைத் தொலைக்கிறேன்.
நினைவலையில்,
கால் புதைய
கால் புதைய
நடக்கிறேன்!












Click it and Unblock the Notifications