வயது
முப்பத்தாறு
என்று சொல்லி வைத்தேன்
எதிர்பாராத வேளையில்
திடீரெனக் கேட்டவனுக்கு.
இயல்பான விசாரணைகளின்
தொடர்ச்சியாகக் கேட்ட
ஆறுமுகத்திடம்
முப்பத்து ஏழு என்று
சொன்னதாக ஞாபகம்.
எனக்குத் தேவையில்லாதது
எனும் தொனி மேலிடக்
கேட்பவர்களின்
முகத்தில் அடிப்பதுபோல்
எப்போதும் நிலையாகச்
சொல்லிவிடுகிறேன்
முப்பத்தி ரெண்டு.
ஆளுக்கொரு விதமாகச்
சொல்லி வருவது மறந்துபோவதால்
முப்பந்தைந்து தானா?
என்று கேட்டு
போன வருடமே வியந்தவனிடம்
இந்த வருடம்
சொல்லித் தொலைக்கிறேன்
முப்பத்தி நாலு என்று.
பிடி கொடுக்காமல்
நான் மழுப்பவதுணர்ந்து
எழுபத்தாறில்
எஸ்.எஸ்.எல்.சி. என்றால்
இப்போது என்று
புலனாய்வில் நுழைகிறவர்களை
பிடிக்காமல் போய் விடுகிறது
எனக்கு.
ஒரு உண்மையைச்
சொல்லி விட்டால்
பல பொய்களைச்
சொல்லத் தேவையிராதுதான்.
ஆயினும் கூட,
உண்மையைச் சொல்வதாக இல்லை
நானும்
நான் கேட்டு எனக்குச் சொல்லும்
பலரும்.