கவிதை-1: விடியல் புதிது
கடும்போரை இறுகிய முகத்துடன்
பன்னிரு மணி நேரம்
பெரும் பொறுமையுடன் பார்த்த
சூரியனும் கண்கலங்கியவாரே
சாய்ந்தான்

சந்திரனை எழுப்பிவிட்டு
மாய்ந்தார்கள் முரடர்கள்
தங்கள் ஆயுதங்களோடு
அப்பாவிகளையும் வீழ்த்திவிட்டு
ஒப்பாரியும் அழுகையுமாக இருந்த
மைதானம் ஓய்வெடுக்கப் போனது
அழகிய வட்ட நிலா உலா வந்தது
மைதானம் மயானமாக மாறியது
அன்றிரவோடு அவள் வாழ்க்கையும்
இருளால் சூழப்பட்டது
இழந்தவற்றை நினைத்து மரத்துப் போனாள்.
இமையும் இதழும் அசையாது
நிலவை உற்று நோக்கின
பொறுமையிழந்து நெஞ்சம் கதறியது
கண்ணிலிருந்து பொங்கிய கண்ணீர்
கையிலிருந்த குருதியைக் கழுவியது
கண்ணீர் வற்றியது
தன் கண்ணீர்த் துளிகளை ஏந்தி
நின்ற மகனைப் பார்த்து
கட்டி அணைத்துக் கொண்டாள்.
தன் எதிர்காலப் பெட்டகத்தை
விடியலும் பிறந்தது
நிம்மதிச் சிரிப்புடன்
சூரியன் உதித்தான்
கவிதை-2: அயர்வு
நீண்ட பாதையில் நடந்தேன்
என் பார்வையின் எல்லை வரை
அசைவற்றிருந்த கற்கள்
மணற்போர்வைப் போர்த்தியிருந்தது
தலை தூக்கிப் பார்த்தேன்
காலியான நீள் நீல வானம்
அதில் மச்சம் போல் இரு கழுகுகள்
சுற்றி முற்றிப் பார்த்தேன்
அசைவற்ற ஜட மரங்கள்
அவற்றின் நிழல்களின் மேல் நடந்தேன்
சூரியனின் பாச வலையிலிருந்து மீண்டு
மரங்களை ஏக்கத்தோடு பார்த்தேன்
அவை அசையாதாவென்று
ஒரு கிளை மட்டும் எனக்கு
செவிசாய்க்க முன் வந்தது
அதைப் பார்த்தபடியே முன் சென்றேன்
என் கால்களின் வேகமில்லாத அசைவு
மணலைத் தட்டி விட்டது
கவனிக்காமல் நடந்தேன்
அங்கே தென்றல் சருகுகளைத்
தாங்கிச் சென்றது
காற்றின் முன் நின்றேன்
எங்கே செல்கிறாய் என்று கேட்க
அது சட்டை பண்ணாமல் என் மீது
மோதிச் சென்றது.
வலுவிழந்த காற்றின் மோதலும்
இதமாகத்தான் இருந்தது
முன்னேறினேன் அதனுடன் மோத
மேலும் இதமளித்தது
சிலிர்த்துக் கண் மூடினேன்
படுக்கத் தோன்றியது
துயிலில் ஆழ்ந்தேன்.
- எஸ்.அனுக்ரஹா ([email protected])
(மாணவி அனுகிரஹா மதுரை தியாகராஜர் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.இ. பயின்று வருகிறார். இந்தக் கவிதைகள் அவர் தனது பள்ளிப் பருவத்தில் எழுதியது.)












Click it and Unblock the Notifications