இன்று உலக தற்கொலை தடுப்பு நாள்...!
- ஆகர்ஷிணி
இனியதோர் வாழ்வுக்கு ஏங்காதோர் யாருண்டு?
சிலருக்கு வாழ்க்கையில் வெற்றிக்கனிகள்
சிரமமின்றியே எளிதாய் கிடைத்து விடுகின்றது!...
சிலருக்கு கனிகள் கைக்கெட்டும் தூரத்தில்
கைநீட்டி பறித்தால் கிடைத்து விடுகின்றது! ...
சிலருக்கு தொரட்டி கொண்டு முயற்சித்தால்
சற்றே சிரமத்துடன் கையில் விழுகின்றது! ....

சிலருக்கோ மரமேறிப்போய் தேனீக்கடி வாங்கியோ
தேள்கடி வாங்கியோ வலியுடன்... ஆனாலும் கிடைக்கின்றது! ...
ஆனால் மற்றும் சிலருக்கோ வாழ்க்கைப் பயணம் முழுவதுமே
தன் முன் கட்டியிருக்கும் புல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்
ஓடிக்கொண்டேயிருக்கும் வண்டி மாடு போலவே ....
தன் மேலுள்ள சுமையை இழுத்து
கடமை செய்ய மட்டுமே விதிப்பயன் வழி செய்கிறது! ...
வாழ்க்கை முழுதும் ஏக்கத்திலும், ஏமாற்றத்திலுமே ...
மேலும் வாழ விருப்பமின்றி முடிந்து விடுகின்றன..
எதோ ஓர் காரணத்தால் முடித்துக்கொள்ளும்
முடிவுக்கு தள்ளப்படுகின்றன...
தன் வலிகளுக்கு காரணிகளாகும்
புறக்கணிக்கும் சக மனிதர்கள், சமூகம்
காதல் தோல்வி, மதிப்பெண் குறைவு
ஓடாய் உழைத்திட்டும் பறிபோகும் வாய்ப்பு
பறிபோகும் பெண்மை, பயமுறுத்தும் மிரட்டல்கள் ,
தீர்க்க முடியாத கடன் சுமை...
இழந்த குடும்ப உயிர்...
கலைந்த கனவு...
சிதைக்கப்பட்ட கனவுகள்..
நிறைவுறா ஏக்கங்கள்..
ஏதோ ஓர் காரணம்
ஒவ்வொரு தற்கொலையின் பின்னும்...
முதலிலேயே தெரிந்திருந்தால்..
அந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்...
ஆதங்கப்படுவது மட்டுமே செய்யாமல்..
முதல் நிலை வெளிப்பாடுகள் தெரிந்தாலே
அந்த ஜீவனின் மேல் சிறிதேனும் கவனம் செலுத்தி
மன வலியை குறைத்திட்டாலே
சிறிதேனும் காத்திடலாம்..
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதல்ல அழகு!...
மனித நேயம் கொண்டு அரவணைத்து
வாய்ப்புகள் பறிக்கப்படாமல்
பார்த்துக்கொள்வதல்லவா அழகு?
தன் மேல் தவறென தெரிந்திட்டாலும்
பழியை வேறோர் தலையில் சுமத்தி
தன்னை பாதுகாத்துக்கொள்ளும்
சுயநல சமூகம்!... மாற வேண்டும்!...
மாற்றம் வந்தால்..
மாறும் தற்கொலை எண்ணம்!..
தற்கொலை என்பது
அதன் காரணிகள் தீட்டிய
திட்டமிட்ட கொலையே அன்றோ!












Click it and Unblock the Notifications