கூலி
அன்றைக்குத் தான் புது மானேஜர் வந்திருப்பான் போல. எல்லோரும் துளி கூட சத்தமே இல்லாமல்கொடுக்கப்பட்ட வேலையை செய்தபடி இருக்க, எப்போதும் எதையாவது பேசியபடியே வேலை செய்துபழகியிருந்த எனக்கு, அந்த
இறுக்கம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேலை பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தது.
மானேஜர் என் கிட்டே வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான். என்னைத்தான் பார்க்கிறான் என்ற பயத்தில்எனக்கு வேலை ஓடவில்லை. புடவையை சரியாகத்தானே செருகியிருந்தேன்?
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தால், என் பக்கத்தில் நின்றபடிக்கு கொஞ்ச தூரத்தில் வேலை முனைப்பில் இருந்தசெம்பாவை அவன் கண்கள் மொய்த்திருந்தன.
அதற்கான காரணத்தை ஊடுறுவும் வகையில் அவள் போட்டிருந்த உள்ளாடை சொல்லியது!! அவளோ, இதுஎதையுமே அறியாதபடி, அறிய விரும்பாதபடி, மும்முரமாக கடமையில் மூழ்கியிருந்தாள்.
செம்பா வித்தியாசமாக வந்திருந்தாள். தலைக்குக் குளித்து, பதவிசாக உடுத்தி, நிறைய அலங்கரித்துக் கொண்டு,பார்ப்பவர்கள் "இன்னைக்கு என்ன விசேஷம்?" என்று கேட்கும் அளவுக்கு இருந்தாள்.
அவள் செய்து முடிக்க வேண்டிய வேலையை, இப்போது அந்த மானேஜர் செய்து கொண்டிருந்தான். பக்கத்தில்அவள் சும்மா போக்குக் காட்டியபடி இருக்க, நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு என் வேலையைத் தொடரஆரம்பித்தேன்.
செம்பாவின் சிணுங்கல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. என்ன, வேலையில் வேண்டுமென்றே கணக்குத்தப்பியதாக சாக்கு சொல்லி, மானேஜரைக்கூப்பிடுவாள்.
அவன் சரி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தெரியாமல் நழுவுவது போல் மேலாடையை நழுவ விடுவாள். இந்தமாயாஜாலத்துக்கு அதிகம் பேர் தப்பிக்க மாட்டார்கள்.
கடைசியாக, வேலைக்கு வேலையும் முடியும். சம்பளமும் எகிறும். செம்பாவுக்கு அப்படித்தான் வேலைத் திறமைஇருக்கும் அளவை விடவும் வேலைத்தனம் அதிகம்!
அதனால்தான் அவளால் என்னை விட எப்போதும் ஒரு படிமேலே, கூடுதல் சம்பளத்தில் இருக்க முடிகிறது. நான்பாதி வேலைதான் முடித்திருப்பேன். அதற்குள் பசி வயிற்றைக் கிள்ளியது.
சாப்பிடலாம் என்று எழுந்திருக்கவும், எங்கிருந்தோ செம்பா வரவும் சரியாக இருந்தது.
"ஏய்! நான் போயிட்டு வரேண்டி! " அவள் வீட்டுக்குக் கிளம்பும் உற்சாகத்தில் இருந்தாள். போட்டிருந்த ஆடைநிறைய .. கலைந்திருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மானேஜரும் அவள் பின்னே போனான்.
இப்போது எனக்குப் புரிந்தது, அவர்கள் எங்கே போகக் கூடும் என்று! "இதெல்லாம் ஒரு பொழப்பா? " என்றுஎனக்குக் கூட அடிக்கடி தோன்றும். சரி, நம் அளவில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போம் என்று என் வேலையைமட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், இல்லாத குறையெல்லாம் சொல்லுவார்கள்.
அதென்னமோ, இந்த "கணக்கு" மட்டும் எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே சரியாக வராது. எனக்கு அதில்பிடித்தம் இல்லை. சில சமயம் எரிச்சலில் நான் ஏதாவது பேசினால் அவ்வளவுதான்!
அடுத்த தடவை எனக்கு லீவு கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரவேண்டி இருக்கும். இன்றைக்கு நிறைய வேலை இருந்தது.
கை விரல்களும், முதுகும் அநியாயத்துக்கு வலித்தது. கொஞ்ச நேரம் கழித்து வேலை செய்யலாம் என்றால்,அதற்கும் மனசு வரவில்லை. சீக்கிரம் முடித்தால் வீட்டுக்கு நேரமே போகலாமே என்றுதான்!
என் வீட்டுக்காரருக்கும் இதே வேலைதான். இதே அலுப்புதான். அவர்கள் வரச் சொன்ன நேரத்துக்கெல்லாம் போகவேண்டும். ஒரு வழியாக வேலையை முடித்து நிமிரவும், மணி பத்து அடிக்கவும், சரியாக இருந்தது.
செம்பா இன்னும் வேலை செய்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும், "முடியவே மாட்டேங்குதடி!" என்று சலித்துக்கொண்டாள். முடியாது .. எந்த வெள்ளிக்கிழமை அவள் பன்னிரெண்டு மணிக்கு முன் வேலையை
முடித்திருக்கிறாள்!? நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இப்போதைக்கு வேன் எதுவும் புறப்படுகிற மாதிரி தோன்றவில்லை.எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. திரும்ப வந்து மானேஜரிடம் சொன்னேன்.
இன்னும் ஐந்து நிமிடத்தில் தானும் கிளம்புவதாகவும், என்னை வீட்டில் விடுவதாகவும் சொன்னான். " ம்..! கார்லபோறே .. ஜாலிதான் போ!" செம்பா என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
நானும் மானேஜரும் வெளியே வந்தோம். அவன் காரை ரிவர்ஸ் எடுத்து, என் பக்கத்தில் வந்து நிறுத்தினான்."ரொம்ப நன்றி" என்று சொல்லியபடி பின்னால் கதவைத் திறக்கப் போனேன்.
"இல்ல இல்ல.. இங்க வாங்க" ன்னு கதவைத் திறந்து விட்டான். நான் தயங்கினேன். "கமான்! இத்தனை திறமையாவேலை செய்ற பொண்ணு.. இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் தயங்கினா எப்படி? " என்று கிலோ கணக்கில் ஐஸ்வைத்தான். கார் கிளம்பியது.
கொஞ்ச தூர பயணத்தில் ஏதேதோ பேசிக் கொண்டோம். "இத்தனை தூரத்தில் இருந்து வர கஷ்டமா இருக்குமே.பேசாம இந்தப் பக்கமே வந்திடலாம்ல?
" அவன் கேட்டதற்கு "சொந்த வீடு" என்று பதில் சொன்னேன். "அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா!? பார்த்தாஇன்னும் சின்னப் பொண்ணாத்தான் தெரியுது"!
அவன் பேச்சில் வழிசல் கூடுதலாகத் தெந்தது. இன்னும் முக்கால் மணி நேரம் இதைப் பொறுத்துக் கொள்ளத்தான்வேண்டும். கடவுளே .. பல்லைக் கடித்துக் கொண்டேன் .. திடீரென்று காரை ரோட்டில் ஓரங்கட்டினான்.
பக்கத்தில் ஏதும் கடை இல்லை .. நான் எதிர்பார்க்காத சமயத்தில் சட்டென்று என்னைப் பிடித்து அழுத்திமுத்தமிட்டான். அவசரம் அவசரமாக விடுவித்துக் கொண்டு "தூ" என்று மூஞ்சியிலேயே துப்பினேன்.
கார் கதவை அவனே திறந்து விட்டான். "பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல" மன்னிப்பு கேட்கும்தொனியில் சொன்னான். "அப்போ..? பிடிக்குதுன்னு சொன்னேனா? " என்று கேட்க அவனிடம் பதில் இல்லை.
நான் அந்த இடத்தை விட்டு விறு விறு என்று நடந்தேன். கார் என்னைத் தாண்டிப் போனது.
அநேகமாக நாளை நான் வேலைக்குப் போக மாட்டேன். இவன்தான் அங்கே எல்லாம் .. இவனைப் பகைத்துக்கொண்டு வேலை செய்வது முடியாத காரியம்.
வேறு ஏதாவது வேலைக்குத் தயாராக வேண்டும். ச்சே!! என்ன வேலை இது! வெறுப்பாக இருந்தது. எதற்காககல்லை உடைக்கிறோம் என்பதே தெரியாமல், உடைப்பது மட்டுமே குறிக் கோளாய் ..
நான் உடைக்கும் கல் கோயிலுக்குப் போகிறதா, கல்லறைக்குப் போகிறதா
என்பது கூடத் தெரியாமல், என் அடையாளம் கொஞ்சமும் இல்லாமல், உடைந்து உடைந்து எங்கோ தூரமாய்ப்பயணம் போகும் கற்கள் ..
செம்பாவுக்கும் எனக்கும் தான் எத்தனை ஒற்றுமை! எங்களை நாங்களே விருப்பப்பட்டு செதுக்கிக்கொண்டிருக்கிறோம். இந்த சாஃப்ட்வேர் துறையில்!! இரண்டு பேருமே சிற்பமாக இருந்தாலும், என் இருப்பிடம் என்னவோ கருவறை என்பதில் மட்டும் இன்னமும்எனக்கு இனம் தெரியாத சந்தோஷம்தான். எப்போதும் எதையாவது பேசியபடியே வேலை செய்வது பழகியிருந்தஎனக்கு, அந்த பின்னிரவின் இறுக்கம் நிறையவே பிடித்திருந்தது.
-வேதா மஹாலஷ்மி([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications