ஆடி அமாவாசை 2021: திருவெண்காடு ருத்ர கயாவை வழிபட்டால் 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்
பிதுர் சாபங்கள் நீங்கவும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கவும் திருவெண்காட்டில் உள்ள ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் வழிபடலாம்.
மயிலாடுதுறை: ஆடி அமாவாசை நாள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற நாள். இந்த நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் சாபங்கள் நீங்கும். பூர்வ ஜென்ம பாவங்களும் போகும் என்பது நம்பிக்கை. சிலருக்கு சுப காரியங்களில் நடைபெறுவதில் தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இந்த தடைகள் நீங்க பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் வழிபட்டு ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் அளித்து வழிபட 21 தலைமுறை பித்ரு சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆடி 23ஆம் தேதி ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் முக்கிய பித்ரு பரிகாரத்தலங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
சோழ மண்டலத்தில் உள்ள நவக்கிரஹ ஸ்தலங்களில் புதன் கிரகத்திற்கான கோவில் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.
இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர். இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

காசிக்கு சமமான தலம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சகல செல்வங்களும் நீங்கும்
நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது. காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.

குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று. படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது.

நரம்பு நோய் நீங்கும்
புதன் பகவானுக்கு இந்த ஆலயத்தில் தனி சந்நிதி உள்ளது. நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு. உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சயம்.

அசுரனை அழித்த சிவன்
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். மருத்துவாசுரன் எனும் கொடிய அரக்கன், சிவ வரம் பெறுவதற்காக, கடும் தவம் மேற்கொண்டான். சிவனாரும் அவனுக்கு வரமளித்தார். ஆனால் வரம் கிடைத்ததுமே, தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் கலங்கிய தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர்.

அருள்பாலிக்கும் சிவன்
மருத்துவாசுரன் எனும் தீயசக்தியை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்பதை அறிந்த சிவபெருமான், அகோர சிவமாக உருவெடுத்தார். அந்த அசுரனை அழித்தொழித்தார். அதே அகோர சிவமாக, திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

புதன் தரிசனம்
காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும்.

சகல செல்வங்கும் கிடைக்கும்
சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

புத்தியில் தெளிவு பிறக்கும்
காசியம்பதி என்று போற்றப்படும் காசி க்ஷேத்திரத்துக்கு இணையான தலம் இது. புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புத பகவான் ஜனவசிய பிரிவினைச் சேர்ந்தவர். அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்தத் தலத்துக்கு வந்து புதன் பகவானை தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications