ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை
ஆடி அமாவாசை நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விருதுநகர்: ஆடி அமாவாசை நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றது. சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா ஆகஸ்டு 08ஆம் தேதி நடைபெறுகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காலங்களில் நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மழை வெள்ளம் வரும் காலங்களில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஓணம், கோகுலாஷ்டமி -ஆகஸ்ட் மாத பண்டிகைகளை கொண்டாட தயாராகுங்கள்
இந்த நிலையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையேறவும்,சாமி தரிசனம் செய்யவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆடி அமாவாசை நாளில் சதுரகிரி மலைக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரைக்கும் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.