உலகம் முழுவதும் வீசும் கொரோனா அலைகள் எப்போது ஓயும்... ஜோதிடர்கள் சொல்வதென்ன
கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இனி உலகமே வைரஸ் உடன் வாழப்பழகிக்கொள்ளத்தான் வேண்டும். கோவிட் 19 வைரஸ் படிப்படியாக உருமாறி வருவதால் உலகத்தில் அது நிரந்தரமாக தங்கி விட வாய்ப்பு உள்ளது.
மதுரை: கொரோனா முதல் அலை முடிந்தது என்று நினைத்த போது இரண்டாவது அலை வீறுகொண்டு வீசியதில் இந்தியாவில் மட்டும் 4 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 18 கோடி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் முடியும் முன்னரே மூன்றாவது அலையின் தாக்கம் பல நாடுகளில் தொடங்கி விட்டது. இந்த கொரோனா அலை எப்போது ஓயும் என்று பல ஜோதிடர்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இது மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தவே. எனவே கொரோனாவின் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொண்டால் மட்டுமே தப்பிக்க முடியும்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே உலக மக்களை தனது பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். நூற்றுக்கணக்கான நாடுகளில் உயிரிழப்பு மட்டுமல்லாது பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. கோவிட் 19 நாவல் கொரோனா வைரஸ் தற்போது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பல நாடுகளில் பரவி வருகிறது.
டெல்டா வகை வைரஸ்தான் இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இது உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கணவன்- மனைவி அந்நியோன்னியத்தை கூறும் மருதானி- ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
மூன்றாவது அலை
கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடையும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நிபுணர்கள் கணிப்பு
கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும், அந்த வைரஸ் மரபணு மாற்றங்களை அடுத்தடுத்து எடுத்து வருவதால், எதிர்காலத்தில் அது ஆண்டு முழுதும் காணப்படும் ஒரு நோயாக மாறி விடும் என சில மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் உருமாறி வரும் கொரோனாவிடம் இருந்து மக்கள் தற்காத்துக்கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.
தீராத நோய்
ஒரு போதும் கொரோனா நூறு சதவிகிதம் ஒழியாது என்றும், ஆண்டு முழுதும் சில கொரோனா நோயாளிகள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார் டெல்லியில் உள்ள எல்என்ஜெபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுரேஷ் குமார்,தெரிவித்தார். கொரோனா எம்.ஆர்.என்.ஏ அடிப்படையிலான வைரஸ் என்பதால் தொடர்ந்து வாழ்வதற்காக தனது வடிவத்தை அது தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் என்பதால் அது ஒரு நீங்காத நோயாக நீடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா எப்போது ஒழியும்
இந்த கொரோனா ஒழிய வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் 2023ஆம் ஆண்டில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். குருவின் சஞ்சாரமே கொரோனா பரவ காரணம் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அலைகள்
புதிய புதிய வைரஸ் பரவி மக்களை பாதிக்கும் என்று பிலவ வருட பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதமே நாம் செய்தி வெளியிட்டிருக்கிறோம். பஞ்சாரம் கணித்தது போலவே தற்போது கொரோனா வைரஸ் உருமாறி பலவித பெயர்களுடன் அலையாக வீசி வருகிறது. கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண பூஞ்சைத் தொற்றுக்களும் பரவ ஆரம்பித்து விட்டது.
ராகு குரு இணைவு
தற்போது ராகு பகவான் கால புருஷ தத்துவத்திற்கு 2வது வீடான ரிஷப ராசியில் உள்ளது. இது தன குடும்ப வாக்குஸ்தானம். பலருக்கும் வேலையிழப்பு, பண நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல குரு தற்போது லாப ஸ்தானமான 11வது வீட்டில் கும்ப ராசியில் இருந்து வக்ரகதியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு சென்று மீண்டும் நேர்கதியில் கும்ப ராசிக்கு பயணிப்பார். 2022ஆம் ஆண்டு குரு 12வது வீடான மீன ராசிக்கு நுழைவார். அதே நேரத்தில் ராகு பகவான் தற்போது உள்ள ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். அந்த கால கட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று கட்டுப்பட வாய்ப்பு உள்ளது. வேலை இழந்த பலருக்கும் புது வேலை கிடைக்கும். நிறைய பண வரவு கிடைத்து நிதி நெருக்கடிகள் நீங்கும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.
2023 வரை அதிகரித்து குறையும்
இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரிக்கும் அதற்குக் காரணம் குருவின் சஞ்சாரம்தான். இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதத்தில் இருந்து உலகம் மற்றொரு சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குரு பகவான் அப்போது கும்ப ராசியில் நேர் கதியில் தனது பயணத்தை தொடங்குவார். குருவின் பயணம் படிப்படியாக கும்பம், மீனம் என கடந்த 2023ஆம் ஆண்டு மேஷ ராசியில் பயணிக்கும் காலத்தில் ராகுவின் சஞ்சாரமும் மேஷ ராசியில் இருக்கும் போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும்.
ஜோதிடர்கள் ஆருடம்
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் நாட்டிற்கு திடீர் அதிர்ஷ்டம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் நோய் பாதிப்புகள் தொடர வாய்ப்பு உள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் வரைக்குமே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் தற்போது வைரஸ் தொற்று குறைவது போல தோன்றினாலும் வரும் நவம்பரில் வீறு கொண்டு மிகப்பெரிய அலை வீசும் என்பதும் ஜோதிடர்களின் கணிப்பாக உள்ளது. அதே நேரத்தில் மக்களை காப்பதில் தடுப்பூசிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் ஜோதிடர்கள் ஆருடம் கூறுகின்றனர்.
அனுபவிக்க வேண்டும்
கொரோனா பெருந்தொற்று மனித குலத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். உலக மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து எப்போதுதான் விடுபடுவார்கள் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது. கொரோனா அலைகளை 2025ஆம் ஆண்டு வரைக்கும் அனுபவித்துதான் ஆகவேண்டும். 2029ஆம் ஆண்டு வரை கொரோனாவின் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தற்போது உள்ளது போல அதிக வீரியமாக இருக்காது என்று ஆறுதலான தகவலையும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
நீண்ட ஆயுள் வாழ
கொரோனாவின் அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருந்தாலும் நேர்மறையான எண்ணங்களுடன் மக்கள் வாழப்பழகிக்கொண்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தற்போது கொரோனா தொற்று குறைந்தாலும் அது முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை. எனவே லாக்டவுன் தளர்வுகள் அறிவித்து விட்டார்கள் என்று பலரும் ஊர் சுற்ற ஆரம்பித்து விட வேண்டாம். ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ நாம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.