திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்..விஐபி தரிசனம் ரத்து..கிரகண நாளில் நடை அடைப்பு
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி பண்டிகை, சூரிய கிரகண நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ஆம் தேதி 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்பட உள்ளதால் பக்தர்கள் அதற்கேற்ப திருப்பதி பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது சிறப்பு தரிசனம் கட்டண தரிசனங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
விஐபிக்கள் பிரேக் தரிசனம் மூலம் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அப்போது இலவச தரிசன அறைகளில் சில மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருப்பார்கள். தீபாவளி பண்டிகை, சூரிய கிரகணம் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கல்யாண உற்சவம்
மேலும், டிசம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளும் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்கள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

ஆர்ஜித சேவா டிக்கெட்
இதுதவிர டிசம்பர் மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான எலக்ட்ரானிக் டிப் 22ம்தேதி காலை 10 மணி முதல் 24ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யப்பட உள்ளது. 24ம் தேதி காலை 11 மணிக்கு பிறகு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு இ-மெயில், மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். பிறகு கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளில் விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி ஆஸ்தானம் வரும் 24ம்தேதி நடக்கிறது. இதனால் அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23ம்தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. வரும் 25ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகண நாட்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடைக்கான தரிசனம், ரூ 300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் நடை அடைப்பு
சூரிய கிரகணத்தை முன்னிட்டு 25ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. திருப்பதியில் புதன்கிழமை 72,243 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,652 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

சந்திர கிரகணம்
நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினமும் காலை முதல், இரவு 7.30 மணி வரை 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினமும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications