விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை... சிலையோடு வந்து மறியல் செய்த தொழிலாளர்கள் கைது
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி கோரியும் சிலை வைத்து வழிபட தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் வாலாஜாபேட்டை சட்டசபை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கும், விழாவை உரிய கட்டுப்பாட்டுடன் நடத்தவும் அனுமதி வழங்கக் கோரி சட்டசபை நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளதாக இந்து முன்னிணி அறிவித்துள்ளது. கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்தாண்டு கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிமையாக கொண்டாட முடிவு செய்து, ஊர்வலமின்றி நடைபெற்றது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் அரசு வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதித்து உள்ளது. இந்த ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

விநாயகர் ஊர்வலம்
தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களிலும், கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிவைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு நாள் முதல் 9 நாட்கள் வரை அந்தந்த ஊர்களில் வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விசர்ஜன ஊர்வலமும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தடையை மீறி ஊர்வலம்
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள கோவில்களை காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் முழக்கத்துடன் விழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறு அனுமதி தராவிட்டால் தடையை மீறி விநாயகர் சதூர்த்தியை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியன்.

அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை பொது இடத்தில் வைப்பதற்கும், நீரில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் அகற்றப்படும்
தனிநபர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவற்றை இந்து சமய அறநிலையத்துறை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிலையோடு சாலை மறியல்
பொது இடங்களில் விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை என்ற தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக சிலை தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கம் அருகே சிலைகளுடன் சாலைமறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கும், விழாவை உரிய கட்டுப்பாட்டுடன் நடத்தவும் அனுமதி வழங்கக்வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்திய நிலையில் போராட்டம் நீடித்தது.

கைது செய்த காவலர்கள்
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு தடையை மீறி கூட்டத்தை கூட்டுவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய் பரப்புதல் உள்ளிட்ட காரணங்களால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications