மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானார் குரு பகவான் - பக்தர்கள் தரிசனம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பரிகாரத் தலங்களில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் நேரில் பங்கேற்றனர். நேரலையிலும் தரிசனம் செய்தனர்.
மதுரை: சுபகிரகமான குருபகவான் இன்றைய தினம் வாக்கியப் பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவித்துறை குருபகவான் ஆலயம், தஞ்சை தென் திட்டை குருபகவான் ஆலயம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் இன்றைய தினம் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். மகர ராசியில் நீச்ச நிலையில் சனியோடு இணைந்திருந்த குருபகவான் கும்ப ராசிக்கு இன்று முதல் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்று சொல்வார்கள் எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழியும் ஏற்பட்டது. குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளைப் பார்வையிடுகிறார். இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் நிறைய பலனடையப்போகிறார்கள். அதே போல மேஷ ராசிக்கு லாப ஸ்தானத்திலும் மகர ராசிக்கு குடும்ப ஸ்தானத்திலும் குரு இடப்பெயர்ச்சியாவதால் இந்த 2 இரண்டு ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி குருவித்துறை குருபகவான் ஆலயத்தில் சிறப்பு லட்சார்ச்சனை தொடங்கியது. இன்று பிற்பகல் வரை சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இன்றும், நாளையும் குருவித்துறை குருபகவான் ஆலயத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குருபகவானுக்கு சிறப்பு யாகங்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. குருபகவான் பரிகார தலங்களில் இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு யாகங்களிலும் பரிகார பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குருபகவான் கோச்சார ரீதியாக நடைபெறும் இந்த இடப்பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீன ராசியில் பிறந்தவர்கள் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.
குருபெயர்ச்சியை முன்னிட்டு வட குரு ஸ்தலம் என அழைக்கப்படும் திருவெற்றியூர் கோவிலில் பரிகார ஹோமங்களும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. திருவொற்றியூரில் உள்ள வடகுருஸ்தலமான குருதட்சிணாமூர்த்தி கோவிலில் விசேஷ ஹோமங்களும் பரிகார பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
108 மூலிகைகள் கொண்டு யாகசாலை நிறைவுபெற்று மகா பூர்ணாஹுதி நடைபெற்று குரு தட்சிணாமூர்த்திக்கு மற்றும் யாகத்தில் வைத்த கலச நீரினால் அபிஷேகங்கள் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் மேற்கொண்டனர்.

பொதுவாக அனைத்து கோயில்களிலும் குரு பகவான் தெற்கு முகமாக பார்த்து அமர்ந்திருப்பதுதான் வழக்கம் திருவெற்றியூரில் மட்டும் வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிப்பதால் இந்த கோவிலில் குரு பெயர்ச்சி நாளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.












Click it and Unblock the Notifications