மண வாழ்க்கையில் மகிழ்ச்சியற்ற நிலை... விவாகரத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்கள்
பெருகிவரும் விவாகரத்துக்களுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஜாதகப்படி என்ன காரணங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும். இன்றைக்கு திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பலரது திருமணவாழ்க்கையிலும் ஒருவித அழுத்தம் காரணமாக மண முறிவு ஏற்படுகிறது. திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுவதற்கு ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று விவாகரத்துக்கு காரணமான கிரகங்களையும் பார்க்கலாம்.
ஜாதகக் கட்டத்தில் 12 வீடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. 2, 7, 8 ஆகிய இடங்களும் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் போன்ற கிரக அமைப்புச் சேர்க்கையும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம். ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும். இன்றைக்கு மணமுடித்த கையோடு பலரும் கோர்ட் படியேறுகின்றனர். 20 ஆண்டுகள் நன்றாக புரிந்து கொண்டு வாழ்ந்தவர்கள் கூட விவாகரத்து செய்கின்றனர்.
நம்முடைய ஜாதகத்தில் லக்னாதிபதி மிகவும் முக்கியம். ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்திற்கான லக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். அந்த லக்னம் சுபத் தன்மை பெற்று சுப கிரகங்களுடன் சேர்க்கை, சுப நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அவரது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
விவாகரத்து நிச்சயம்
7ஆம் இடம், 8ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் சின்ன சின்ன சண்டைகள் நடக்கும், அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையாது. ஆனால் ஒரு சிலருக்கு அவ்வாறு அமைந்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்குக் காரணம் சுக்கிரன் வலுவாக இருக்கும். சுக்கிரன களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்கிரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும். ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.
அஷ்டமத்து சனியால் பிரிவினை
சில ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்குட்படுத்துவோம். அதில் சுக்ரன் சிறப்பாக இருந்தும், 7வது 8வது இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தும் விவாகரத்து ஆனவர்களும் இருப்பார்கள். அஷ்டமத்து சனி தசை நடக்கும்போது திருமணம் நடந்திருந்தால் இதுபோன்ற நடக்க வாய்ப்பு உண்டு. மாப்பிள்ளைக்கு அஷ்டமத்து சனி, பெண்ணுக்கு ஏழரை சனி நடந்தாலும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.
சூரியன் சுக்கிரன் கூட்டணி
சூரியன், செவ்வாய், சனீஸ்வரன், ராகு மற்றும் கேது ஒரு ஜாதகத்தில் ஏழாம் வீட்டோடோ அல்லது எட்டாம் வீட்டோடோ சம்பந்தப்பட்டிருந்தால் அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழலாம். குறிப்பாக, இல்லற ஸ்தானமான ஏழாம் வீட்டோடு, சூரியன் சம்பந்தப்பட்ட இருந்தால், திருமண வாழ்க்கையின் அமைதி நிச்சயம் கெடும். திருமண வாழ்க்கைக்கு முக்கியமான கிரகமான சுக்கிரன் 2, 4, 7, 9 ஆம் வீடுகளில் அமர்ந்து அங்கே சூரியனோடு இணைந்திருந்தால், அங்கு விவாகரத்து நடைபெற வாய்ப்புகள் மிக அதிகம்.
சங்கடம் தரும் சனி பார்வை
குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதி. சனி 5ம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டையும், தன, குடும்ப, வாக்குஸ்தானமான 2ம் வீட்டையும் பார்ப்பதால் திருமண உறவில் சிக்கல், வெறுப்பு, கசப்பு, நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து ஏற்படுகிறது.
சந்தேக வாழ்க்கை
திருமண வாழ்வில் அடுத்த முக்கியமான கிரகமான செவ்வாய் ஒரு ஜாதகத்தில் 1ஆம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ அமர்ந்து அங்கே சுபக்கிரகங்களின் பார்வை கிடைக்காவிட்டால். அந்த நிலையில் தம்பதிகள் இருவரும் வாழ்நாள் முழுவதும் வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளிலும் காலம் கடத்துவார்கள். சனீஸ்வரன் ஒரு ஜாதகத்தில் லக்னம் மற்றும் ஏழாம் இடங்களோடு தொடர்பில் இருந்தால் தம்பதியர் இடையே திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியமான பரஸ்பர நம்பிக்கை துளியும் இருக்காது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் எப்போதும் சந்தேகத்தோடு நடந்து கொள்வார்கள். மண வாழ்க்கை நரகமாகும்.
உறவில் சிக்கல்
நிழல் கிரகங்களான ராகு ஒரு ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் அமர்ந்தாலோ, அல்லது தொடர்பில் இருந்தாலோ, தம்பதிகளுக்குள் தாம்பத்திய உறவில் சிக்கல்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு அதில் முழு திருப்தி வராது. ராகுவைப் போலவே கேதுவும் திருமணம் தொடர்பான பாவங்களில் ஒரு ஜாதகத்தில் தொடர்பு கொண்டிருந்தால், திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் எழும். கேதுவின் தாக்கத்தால் கணவன் மனைவியிடையே எப்பொழுதுமே ஒரு நெருக்கமான உறவு இருக்காது. ஊருக்காகவும், குடும்பத்திற்காகவும் மட்டுமே வெளி உலகில் அவர்கள் தம்பதிகளாக வாழ்வார்கள்.
திருமண வாழ்க்கையில் சங்கடங்கள்
ஒருவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது என்றால் அவர்களின் ஜாதகத்தில், சனீஸ்வரன், ராகு, கேது போன்ற மூன்று கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் பங்கு நிச்சயம் இருக்கும். பொதுவாகவே, ஏழாம் இட அதிபதியோ, அல்லது ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களோ, அதிக அளவில் நற்பலன்களை கொடுக்க மாட்டார்கள். அதுவே அவர்கள் சாதகமில்லாத நிலையில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல சங்கடங்களை ஏற்படுத்தி விடுவார்கள்.
நிரந்தர பிரிவினை
முக்கியமாக, ஏழாம் இடத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் மகா தசை அல்லது தசா புக்தி நடைபெறும் காலங்களில் அவைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுபோல ஏழாம் வீட்டின் அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தாலும் அங்கு விவாகரத்திற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டோடு தொடர்பில் இருந்தால், அங்கே தம்பதிகளுக்குள் நிரந்தர பிரிவினை வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.
அர்த்தநாரீஸ்வரர்
திருமலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளை ஆண்டுக்கு ஒருமுறை தரிசிப்பதால் மண வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி நல்ல பலனைத்தரும். திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள உமையொருபாகன் அர்த்ததாரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட இருதார தோஷம் நீங்கும். ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதால் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.