நவராத்திரி விழா..கேரளாவிற்கு அம்மன் சிலைகள் ஊர்வலம்..பத்மநாபபுரம் அரண்மனையில் கைமாறிய உடைவாள்
கன்னியாகுமரி: கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மாற்றி சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் அணி வகுப்பு மரியாதையுடன் கேரளாவிற்கு பவனியாக எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. தமிழக இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு, கேரளா அமைச்சர்கள் இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

நவராத்திரி விழா
நவராத்திரி விழா நாட்களில் அங்கு சாமி சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா முடிவடைந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பாரம் பரியமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.

சாமி சிலைகள் ஊர்வலம்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி விக்ரகங்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதி அம்மன் திருக்கோயிலை சென்றடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மார்த்ததாண்டவர்மாவின் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உப்பரிகை மாளிகையில் உடைவாள்
இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில தேவசம்போர்டுதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளமாநில பள்ளிகல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி ஆகியோர் மன்னரின் உடைவாளை எடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கினர். அதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தேவாரக்கட்டு அருள்மிகு சரஸ்வதிஅம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்லும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் வழங்கினார்.

அமைச்சர் சேகர்பாபு
இந்த விழா இரு மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விழாவாக காலம் காலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் இரா.கண்ணன்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,இ.ஆ.ப., தமிழ்நாடு, கேரளமாநில மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications