ஐப்பசி துலா ஸ்நானம்: அழகு ஆரோக்கியம் ஐஸ்வர்யம் கிடைக்கணுமா காவிரியில் நீராடுங்கள்
ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் காவிரியில் ஒருநாள் நீராடினால் கூட கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.
கும்பகோணம்: ஐப்பசி மாதத்தில் எல்லா நாள்களிலும் காவிரி துலாக் கட்டத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காவிரியில் தினசரியும் நீராடினால் நன்மைதான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டார் கங்கை அன்னை அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, நீ காவிரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும் என்றார். எனவேதான் ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் ஐக்கியமாகின்றன.
காவிரி ஓடும் ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு திருவிடைமருதூர், பூம்புகார், பவானி, கும்பகோணம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகிய இடங்கள் புனித ஸ்நான கட்டங்களாகக் கருதப்படுகிறது. நீராடிய பின் அன்னதானம் செய்துவிட்டு சிவனை தரிசித்தல் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம்.
காவிரியில் நீராடல்
ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் புனித நீராடுவது அவசியம் என்கிறது சாஸ்திரம்.
இன்னும் சில நாட்களில் குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்வையிடுகிறார் குரு பகவான். இந்த குரு பெயர்ச்சி மற்றும் குரு பார்வையால் தனுசு, கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம் ராசி மற்றும் லக்னகாரர்கள் தீர்த்த யாத்திரை செய்து காவிரியில் புனித நீராடும் அமைப்பை பெற்றுள்ளனர்.
மோட்ச ஸ்நானம்
தீர்த்த யாத்திரை சென்று புண்ணிய நதிகளில் நீராடவும் ஒரு அமைப்பு வேண்டும். ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என போற்றப்படுகிறது. கால புருஷனுக்கு தனுசு ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார்.
புனித பயணங்கள்
ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபகிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான். குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான்.
குரு பார்வை
ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபகிரகத்தின் பார்வை பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம கார்யங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.
மேஷம் சிம்மம் தனுசு
பன்னிரெண்டாம் அதிபதி சுபகிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய செலவு செய்ய வைக்கும். ஜோதிடத்தில் மேஷம்,சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும். மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோட்ச திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.
ராகு கேது தொடர்பு
மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி சர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். குருபகவான் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும் போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும்.
காவிரியில் நீராடுவோம்
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற புகழுடன் திகழ்கிறது மயிலாடுதுறை. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும் என்று நதி தேவதைகளிடம் பிரம்மா கூறினார். துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான ‘கடைமுழுக்கு வைபவம்' அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு துலா ஸ்நானம் இன்று தொடங்கியுள்ளது. கடைமுழுக்கு நவம்பர் 16ஆம் தேதியாகும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி திதி கொடுப்பவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதால் ஒருநாளாவது காவிரியில் நீராடி முன்னோர் கடன் செலுத்துவோம்.