அட்சய திருதியை: சிவனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பசி நீக்கிய காசி அன்னபூரணி - புராண கதை
அட்சய திருதியை நாளில் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும் என்று பகவான் மகாவிஷ்ணு ஆசி வழங்கியுள்ளார்.
சென்னை: சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளை நாம் அட்சய திருதியை தினமாகக் கொண்டாடுகின்றோம். அட்சய திருதியை நாளில் செல்வம் பெருக நாம் விரும்பும் பொருட்களை வாங்கலாம். தலைமுறைக்கும் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யலாம். அட்சய திருதியை எப்படி வந்தது என்பது பற்றிய புராண கதை உள்ளது அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, இரத்த பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்து இடர் தீர்த்ததால் தாம் தான் அன்னத்திற்கதிபதி என்று, சிறு கர்வம் கொண்டாள்.

அந்த கருத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி" என்று வேண்டி நின்றார்.
அதைக்கேட்ட அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அன்னபூரணி கொடுத்த உணவுகள் அனைத்தும் பூர்த்தியாக தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.
உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்து அழைத்தார். மஹா விஷ்ணுவாகிய மாதவனும், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.
அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. அன்னபூரணி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார்.
உடனடியாக அந்த பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின. அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார். மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார்.
தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால், சிவ யோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்
அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உமக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார்.
உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எங்ஙனம் வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று கூறி ஆசிர்வாதம் செய்தார்.
அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பட்சம் திரிதியை நாம் அட்சய திருதியை திருநாளாக கொண்டாடுகின்றோம். எனவே அன்றைய தினம் விரும்பும் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள். புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள். அட்சய திருதியை நாளில் கொடுக்கும் தானம் தலைமுறைக்கும் புண்ணியத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications