அழகர் கோவில் கள்ளழகர் திருக்கல்யாணம் - ஆன்லைனில் காண அறநிலையத்துறை ஏற்பாடு
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது.
மதுரை: அழகர்கோவிலில் அருள்பாலிக்கும் கள்ளழகரின் திருக்கல்யாண வைபவத்தை ஆன்லைனின் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர நாளில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் திருக்கல்யாணம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக அழகரின் திருக்கல்யாணத்தை பக்தர்கள் ஆன்லைனில் கண்டு தரிசிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத, கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 7.25 மணிக்கு சன்னதிக்குள் சுவாமி தேவியர்களுடன் சென்றார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நாளை 28ஆம் தேதி நடைபெறுகிறது. 29ஆம் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே கள்ளழகர் திருக்கல்யாணத்தை கோவில் இணையதளத்தில் http://alagarkoil.org/ கண்டு தரிசனம் செய்யுமாறு அறநிலையத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் அடுத்த மாதம் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகையில் இறங்கவில்லை. அழகர் மலையிலேயே அனைத்து திருவிழாக்களும் நடைபெற்றன. இந்த ஆண்டாவது அழகர் மதுரைக்கு வருவாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications