சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: தேரோட்டம்,தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா காரணமாக இந்த ஆண்டும் தேரோடும் வீதிகளில் தேர்த் திருவிழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தோரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. 23ஆம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக சித்திரை தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் சித்திரை தேர்த் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா ஞாயிறன்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அபிஷேக மண்டபத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து அம்மன் மரக்கேடயத்தில் புறப்பாடாகி 2வது பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபத்தை சேர்ந்தார். பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெற்று, இரவு 8 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.

சித்திரை திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி 2வது பிரகாரத்தை வலம் வருவார்.
இந்த உற்சவ காலங்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் நாளான நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20ஆம் தேதி காலை 10.31 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் 2வது பிரகாரத்தை வலம் வந்து, அபிஷேக மண்டபத்தை சேர்வார். இந்த நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த ஆண்டும் தேரோடும் வீதிகளில் தேர்த் திருவிழா நடைபெறாது. அன்றைய தினம் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் 2வது பிரகாரத்தை வலம் வந்து, அபிஷேக மண்டபத்தை சேர்வார். இந்த நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications