கொரோனா லாக்டவுன்... முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து - வீட்டிலேயே வழிபடலாம்
கொரோனா ஊரடங்கை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முருகன் ஆலயங்களில் வைகாசி மாதம் நடைபெறும் விசாகத்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகம் நாளில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளளப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களில் விசாகம் நட்சத்திரம் 16வது நட்சத்திரம். துலாம் ராசியில் மூன்று பாதங்களும், விருச்சிக ராசியில் ஒரு பாதமும் அமைந்துள்ளது. முருகப்பெருமான் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் தமிழ் கடவுள் முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு.
வைகாசி விசாகம் நாளில் நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம் பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் போன்றவற்றைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் வாக்கு. வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீரால் அபிஷேகம் செய்தால் நன்மக்கட்பேறு உண்டாகும். கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்கியம் சீராகும்.
ஆண்டு தோறும் முருகப்பெருமானி அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாகம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 9 நாட்கள் வசந்த உற்சவமும், ஒருநாள் விசாக விழாவுமாக 10 நாட்கள் வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 10வது நாள் வைகாசி விசாகம் தினத்தில் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் பன்னீர்காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என்று பல்வேறு விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை விசாகத் திருநாளில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமான் தன் இருப்பிடத்தை விட்டு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சண்முகப்பெருமானுக்கு காலையிலிருந்து மாலை வரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளா காட்சியாக அமையும்
இந்தஆண்டிற்கான வைகாசி விசாக விழா வருகின்ற 16ஆம்தேதி தொடங்கப்பட வேண்டும். இதேபோல 25ஆம் தேதி வைகாசி விசாக விழா நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா பரவல் 2வது அலை அதிவேகமாக பரவுதலையொட்டி ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் மூடப்பட்டுள்ளது. ஆகவே திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான். இத்தகைய சிறப்பு வைகாசி விசாக நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து முருகனை நினைத்து வழிபடலாம்.