ஜோதியாக சிவனிடம் ஐக்கியமான காரைக்கால் அம்மையார் - பக்தர்கள் தரிசனம்
காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
Recommended Video
சென்னை: காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறைவன் ஜோதி வடிவில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி அதிகாலையில் நடைபெற்றது.
சிவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வீட்டு மாடிகளில் நின்று சுவாமி மீது மாங்கனிகளை இறைத்து தரிசனம் செய்தனர்.
புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாரின் வரலாற்று நிகழ்ச்சியை மையமாக கொண்டு, கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனித் திருவிழா ஒரு மாதம் நடைபெறும். இந்தாண்டு மாங்கனித்திருவிழா 25ம் தேதி தொடங்கியது. 2ம் நாள் நிகழ்ச்சியாக காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருமணம் முடிந்த பின் பக்தர்களுக்கு மாம்பழத்துடன் தாம்பூல பை வழங்கப்பட்டது.
மாங்கனி திருவிழா
காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது. பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல்,சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சியில் காரைக்கால் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசாதமாக பெற்ற பக்தர்கள்
புதன்கிழமை காலை 9 மணிக்கு கயிலாசநாதர் கோயிலில் இருந்து, பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது வீட்டு வாசல், மாடிகளில் இருந்து பக்தர்கள், சுவாமி மீது மாங்கனிகளை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வீசிய மாங்கனியை ஏராளமானோர் தங்களின் கைகளினால் போட்டி போட்டு பிடித்துக்கொண்டு வீட்டுக்குக் கொண்டு சென்றனர். முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மீது இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இறைவனிடம் ஐக்கியம்
வியாழக்கிழமையன்று அதிகாலை 4 மணிக்கு அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் மற்றும் கோயிலில் உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமானதை விளக்கும் வகையில் காரைக்கால் அம்மையார், பேயுருவில் கைலாயம் சென்ற வைபவம் நடைபெற்றது. அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருந்தார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்பட்டது. பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்பட்டது. அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சென்று சேர்த்தனர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.
பேய் மீது பயமிருக்காது
பேய் பயம் கொண்டவர்கள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் குருபூஜை காணும் பேய்வுறு கொண்ட காரைக்காலம்மையை திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கி ஆடலரசனையும் வணங்கி அங்குள்ள மந்தனின் புதல்வன் மாந்தியையும் வணங்க பேய் பயமெல்லாம் நீங்கும்.