தூமாவதி ஜெயந்தி : ஆனி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் ஜேஷ்டா தேவியை வணங்கினால் என்ன நன்மை
சக்தி வடிவங்களிலேயே தூமாவதி தனித்துவமான சிறப்புகள் பெற்றவள். தேவியின் அரிய வடிவங்களில் ஒன்று தூமாவதி.
சென்னை: ஆனிமாத வெள்ளிக்கிழமை வளர்பிறை அஷ்டமி தூமாவதி ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. அஷ்டமி திதி காலபைரவருக்கு உகந்த நாள். இன்றைய தினம் ஆனிமாத சுக்லபட்ச அஷ்டமி தூமாவதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தூமாதேவியை வழிபடுவதன் மூலம் நோய் பாதிப்புகள் நீங்கும், எதிரிகள் தொல்லை ஒழியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகம் நடைபெற்றது. மாலையில் எட்டு திக்கு காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் மஹா கால பைரவர் யாகம், அஷ்ட மாத்ருகா பூஜையும் நடைபெறுகிறது. தூமாவதி தேவிக்கு சிறப்பு யாகமும் நடைபெற உள்ளது.

அம்பிகைக்கு உகந்த ஆதார சக்திகள் காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தான் தசமகா வித்யா தேவியர் என்று கொண்டாடப்படுகிறார்கள். பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம் ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே சாக்த மார்க்கத்தின் ஆதி தேவியர்கள்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தன் தந்தை செய்யும் யாகத்தில் பங்கு கொள்ள, ஈசனை அணுகியபோது, தன்னை அழைக்காமல் அவன் செய்யும் யாகத்தில் பார்வதி பங்கு கொள்ளக் கூடாதென ஈசன் தடுக்கிறார். பார்வதி சர்வம் சக்தி மயம் என்பதை எடுத்துக் காட்ட பத்து திசைகளிலும் பத்து வடிவங்களில் வியாபித்து, சக்தியே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதனை வெளிப்படுத்தி சிவனை சாந்தம் அடையச் செய்து, யாகத்தில் கலந்து கொள்கிறார். அவ்வாறு அம்பிகை எடுத்த பத்து வடிவங்களில் ஏழாவதாகக் கூறப்படும் வடிவம் ஸ்ரீ தூமாவதி தேவியின் வடிவாகும். ஸ்ரீ தூமாவதி தேவியை "ஜேஷ்டா தேவி' என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பாற்கடலில் லக்ஷ்மி தோன்றுவதற்குமுன், அவளுக்கு மூத்தவளாகத் தோன்றியவள் இந்த தேவி. ஆதலால் "மூத்த தேவி' எனப்பட்டு நாளடைவில் மூதேவி எனப்பட்டாள். தூமாவதி மந்திரத்திற்கு ஜேஷ்டா தேவியே அதிதேவதை இம் மந்திரத்தின் ரிஷி பிப்பலாதர் ஆவார். சக்தி வடிவங்களிலேயே தூமாவதி தனித்துவமான சிறப்புகள் பெற்றவள். தேவியின் அரிய வடிவங்களில் ஒன்று தூமாவதி. இந்த தேவியை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் கவலைகள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தட்சனின் மமதையை வெறுத்து, தட்சனின் மகளான தமது இச்சரீரம் இனி தேவையில்லை என்று முடிவு செய்து யோகக்கினியில் தன் தேகத்தை அழித்துக் கொள்கிறார் சதிதேவியாகிய பார்வதி தேவி. அச்சமயம், அக்னி குண்டத்திலிருந்து பெரும் புகை மண்டலம் எழுந்தது. அந்தப் புகை மண்டலமே தூமாவதி என்ற சக்தியாய் உருவெடுத்தது. தூமத்திலிருந்து (புகை) தோன்றியதால் தூமாவதி என்ற பெயரும் உண்டானது. தூமாவதி, சாகம்பரி தேவியின் யுத்தத்தில் உதவியவர்களில் ஒருத்தியாகவும் சும்ப நிசும்பரை அழித்தபோது, துர்க்கையின் படையில் தோன்றி, புகை மூலம் அசுரர்களை மயக்கி அழித்ததாகச் சொல்லப்படுகின்றது.
இந்த தேவி தூய்மையற்ற ஆடைகளை அணிந்து, சீரற்ற பற்களையும், முறம் போன்ற வயிற்றையும், வியர்வையுடன் என்றும் பசித்திருப்பவள். கருத்த நிறமும் விரிந்த சடையும் உடைய இவள் கலகத்தைத் தூண்டுபவள். சிவனே மறைந்த பின்னும் எஞ்சுபவள் இவளென்றும் காலத்தைக் கடந்தவள் என்றும் தூமாவதி போற்றப்படுகின்றாள். பிரபஞ்சம் எரிந்தழிந்த பின் எஞ்சும் பெரும்புகையே தூமாவதி என்றும் கூறப்படுகிறது.
தூமாவதி உபாசனை சத்ரு நாசத்தை விளைவிப்பதாகும். திட மனமும், ஆழ்ந்த ஞானமும் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும். தூமாவதி இளகிய மனம் படைத்தவள். பெண்களால் சூழப்பட்டவள். மூதாட்டியாக சிறுவர்களுக்குப் பேரறிவை வழங்கும் குருவும் அவளே. துயரங்களுக்கு அதிபதியான இத்தேவியின் அனுமதி இல்லாதோர் அவளை வணங்க இய லாது. வணங்குவோருக்கு வாழ்வில் விரைந்து ஞானமும், இறந்தபிறகு முக்தியும் உறுதி. வாழும் போது சொல் பலிக்கும்.
நேர்மை நெறியோடு இருப்பவர்களுக்கு அவள் திருக்கரம் ஆசீர்வதிக்கும். வயதானவ ர்கள், விதவைகள், சமூகத்தால் ஒதுக்கப்பட் டோர் போன்றோர் தம்மை அண்டி வந்தால் அவர்களுக்கு சரீர, மனோ, புத்தி, ஆத்ம சக்திகளை அருள்பவள்.
ஜேஷ்டா தேவி வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாக காண ப்படுகிறது. திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோயிலில் அனுக்கிரக தேவதையாக விளங்குகிறாள். திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், காஞ்சி கயிலாச நாதர் கோயில், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதிக்கு வடமேற்கேயும் அமைந்து அருள் தருகிறாள்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூ வூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயில், ஹரிகேச நல்லூர் பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென்புறத்திலும் ஜேஷ்டாதேவியின் திருவுருவைக் காணலாம். திருச்சி மாவட்டம், உய்யக் கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
இத் தேவியை உபாசிப்பதால் சத்ரு நாசனம், நற்பண்புகள், நல்ல ஞானம் கிடைக்கும். கஷ்டங்கள், வியாதிகளிலிருந்து விடுபடலாம். சகல காரியசித்தி, நல்லறிவு பெற தூமாவதி தேவி உபாசனை வழிவகுக்கிறது. இந்த தேவி 64 விதமான தரித்திரங்களை நாசம் செய்பவள். லக்ஷ்மி தேவி அளித்த செல்வத்தை காப்பாற்றி கொடுக்கும் சக்தி படைத்தவள்.
ஆனி சுக்லபட்ச அஷ்டமி தினமான இன்றைய தினம் நாம் மகாபைரவரை வழிபடுவதோடு, தூமாதேவி, ஜேஷ்டாதேவியையும் வழிபடுவோம். நோய்கள், துன்பங்களில் இருந்து விடுபடலாம்.












Click it and Unblock the Notifications