கருட புராணம்: கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் நரகத்தில் என்ன தண்டனை தெரியுமா
கருடபுராணத்தில் எமனின் அரண்மனை, சித்ரகுப்தன் கணக்கு, பாவம் செய்பவர்களுக்கு மரணத்திற்கு பிறகு கிடைக்கும் தண்டனை என்ன என்று மகாவிஷ்ணுவினால் கருடனுக்கு கூறப்பட்டுள்ளது.
மதுரை: கும்பி பாகம், அந்த கூபம், கிருமி போஜனம் எல்லாம் எங்கேயே கேட்ட மாதிரி இருக்கா. நம்ம அந்நியன் படத்தில வர்ற தண்டனைதாங்க. கருடபுராணத்தை படித்துதான் ஷங்கர் சில தண்டனைகளை தன் படத்தில வச்சிருப்பார். இந்த கருட புராணத்தில் மொத்தம் 28 நரகங்கள் இருப்பதாகவும், அதில் பாவம் செய்தவர்களுக்கு கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
கருடன் திருமாலுக்கு பிடித்த வாகனம். கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்று கருதியே பிரம்மோற்சவ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுகின்றனர். அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்து வைகையில் இறங்கும் கள்ளழகர் வண்டியூர் சென்று இளைப்பாறிய பின்னர் சந்தன அலங்காரம் செய்து கொண்டு கருட வாகனத்தின் மீதேறி தன் வருகைக்காக மண்டூகமாக தவமிருக்கும் மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த கருடனுக்கு மரணத்திற்குப் பின்னர் மனிதர்களுக்கு என்னென்ன தண்டனை எப்படி நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் மகாவிஷ்ணு.
நம்மை விட பெரியவர்களை இகழ்ந்து பேசினாலோ நீச மொழிகளினால் பேசினாலோ பாவம் ஏற்படும் என்றும் அந்த பாவத்திற்கு தண்டனையாக வாயில் இருந்து புழுக்கள் உருவாகும் கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இனிய மொழிகளை பேசினால் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. பிற உயிர்களை வாட்டி வதைத்தவர்கள் துன்பப்படுவார்கள் என்றும் கொடூரமான சரீரம் கிடைக்கும் என்னும் மகாவிஷ்ணு தனது பக்தனும் பெரிய திருவடியுமான கருடனிடம் கூறியுள்ளார்.
பாவத்தின் சம்பளம் கொடிய தண்டனை
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களை எம லோகத்தில் வசிக்கும் சித்ரகுப்தன் என்னும் கணக்குப்பிள்ளை தனது நோட்டில் குறித்து வைத்திருப்பார். இந்த பாவத்தின் தன்மைக்கு ஏற்ப எமதர்மன் தனது கிங்கர்களின் மூலம் தண்டனைகளை நிறைவேற்றுவார் என்றும் 28 கொடிய நரகங்களைப் பற்றியும் அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் பட்சி ராஜனான கருடனுக்கு விளக்கமாக கூறுகிறார் மகாவிஷ்ணு.
துரோகம் செய்பவர்களுக்கு தண்டனை
பிறரது மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடித்த பாவிகள் அடையுமிடம் தாமிரை நரகம். கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் செல்லும் நரகம் ரௌரவமாகும்.
கும்பி பாகம்
தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்ரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம். பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம். தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும். அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.
கிருமி போஜனம்
சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம். தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.
மோக வெறியர்களுக்கு தண்டனை
பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம். கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம். நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
ஒழுக்கமற்றவர்களுக்கு தண்டனை
அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம். பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.
விபரீத மோகத்திற்கும் நரகம்
டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம். வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.
குடிகாரர்களுக்கு நரகம்
வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம். பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.
எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.
தீமைக்கு தண்டனை
தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.
நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம். எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.
பணத்தை பதுக்கியவர்களுக்கு தண்டனை
தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம். பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம். வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.
செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.