வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் பக்தர்களுக்கு நல்ல செய்தி.. 10 நாட்களும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்
சகஸ்கர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம் ஆகிய சேவைகளில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மகர சங்கராந்தி முதல் ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையான் கோவிலுக்கு செல்வது என்றாலே பக்தர்களுக்கு தனி ஆர்வம் வந்து விடும். ஏழுமலைகள் எப்படி உருவானது என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான புராண கதையே உள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணன், பெரு மழையிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு கோவர்த்தன மலையை தனது விரலால் தூக்கி, தாங்கிப்பிடித்தார். ஏழு நாட்கள் முடிந்த பின்னர் மலையை கீழே இறக்கி வைத்தார்.
கிம் உன் தாத்தா மரணம்.. வடகொரிய மக்களுக்கு ஒரு வார காலம் சிரிக்க தடை போட்ட அதிபர்
அப்போது கோவர்த்தன மலை, பகவானே உமது விரல் பட்டதை விட உமது பாதம் படவே நான் விரும்புகிறேன். மேலும் என்னை சுமந்த உம்மையும், உமது நாமம் சொல்லி வரும் பக்தர்களையும் நான் சுமக்கும் பாக்யமும் எனக்கு கிட்டச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணர் அப்படியே ஆகட்டும். நீ எண்ணியது நடந்தேறும் என்றார். மறுகணமே ஏழு நாள் கிருஷ்ணர் தாங்கி பிடித்ததால் அதனை நினைவுக்கூறும் வகையில் கோவர்த்தன மலை ஏழு மலையாக உருவெடுத்தது. ஏழு மலையிலும் பாதம் பணித்து மேல் மலையில் வாசம் செய்தார் ஸ்ரீநிவாசன்.
கோடிக்கணக்கில் வருமானம்
ஏழு மலைக்கு மேலே நின்றதாலே சீனிவாச பெருமாள் ஏழுமலையான் என அழைக்கப்படுகிறார். ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோடிக்காண ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆன்லைனில் தரிசனம்
கோவிலில் படிப்படியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும் ஆர்ஜித சேவைகள் மட்டும் தொடங்கப்படவில்லை. சகஸ்கர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம் ஆகிய சேவைகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நேரடியாக ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரலையில் மட்டும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
பக்தர்கள் அனுமதி
தற்போது, கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் வரும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி முதல் ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய மாநில அரசிடம் அனுமதி கேட்டு இருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் திருப்பாவை
மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் நேற்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படுகிறது. ஒரு மாதத்திற்கு பின்னர் தை மாதத்தில் இருந்து வழக்கம்போல் சுப்ரபாத சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலையில் 10 நாட்கள் சொர்க்கவாசல்
ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்கள் பத்து நாட்களும் ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்.
சொர்க்கவாசலில் இலவச தரிசனம்
பிரம்மோற்சவ நாட்களில் செய்யப்பட்டது போல் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள் ஆகியோரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு அழைத்து வந்து இலவசமாக தரிசனம் செய்யும் வசதியை செய்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் புத்தாண்டு முதல் அதிகளவிலான பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
நன்கொடை வழங்கும் பக்தர்கள்
ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடைபெறும் அனைத்து சேவைகளையும் வருடத்தில் ஒருநாள் தரிசிக்கும் வகையிலான உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு வசதி
பக்தர்களின் நன்கொடை உதவியுடன் திருப்பதி மலையில் அனுமன் அவதரித்த இடத்தில் அவருடைய தாய் அஞ்சனா தேவிக்கு முழு அளவிலான ஆலயம் ஒன்றை ஏற்படுத்தவும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.