திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு - கொரோனா தடுப்பூசி அவசியம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை: காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் முன்பதிவு செய்து இ-பாஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் பெரியவர் என்று பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்டு, ஈசனின் அடிமுடி காண விரைந்த தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை.
பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கூறினார்.
சிவ பெருமானின் திருவடியைக் காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம்.
திருவண்ணாமலையை நினைக்க முக்தி அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம். இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 7ஆம் தேதி முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது.
சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவிகிதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும். இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.