திருவண்ணாமலை: 2668 அடி உயர மலை மீது நாளை ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண குவியும் பக்தர்கள்
திருவண்ணாமலையில் நாளை மகாதீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 2668 உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நாளை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, திரியாக பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி, 3500 லிட்டர் முதல் தர நெய் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிகாலையில் பரணி தீபம்
இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சரத தேரோட்டம் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. நாளை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும்.
ஆடும் அர்த்தநாரீஸ்வரர்
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும்.
2668 உயர மலையில் மகா தீபம்
அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.
வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்கு போடமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன்பும் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
சிறப்பு ஏற்பாடுகள்
மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். கார்த்திகை தீப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
3500 லிட்டர் நெய் தயார்
தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்ற திரியாக பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி, 3500 லிட்டர் முதல் தர ஆவின் நெய் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மலை மீது அவை கொண்டு செல்லப்படுவிடும். மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்.
அரோகரா முழக்கம்
நாளை மகாதீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மழையையும் பொருட்படுத்தாமல் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏற்கனவே பக்தர்கள் வந்து குவிய தொடங்கிவிட்டனர். அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். அண்ணாமலையாருக்கு அரோகாரா என்ற முழக்கம் என்று எதிரொலிக்கிறது.
8 ஆயிரம் போலீசார்
திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிரிவலப்பாதையில் 36 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 8 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். கோவில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகிறது.