செல்வ வாழ்வு தரும் குபேர கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - மனதார வணங்கினாலும் பலன் உண்டு
திருவண்ணாமலையில் குபேர லிங்கத்தை வணங்கவும் குபேர கிரிவலம் வருவதற்கும் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை: குபேர லிங்க கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்றைய தினம் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேரில் சென்று வணங்க முடியாவிட்டாலும் குபேர லிங்கத்தை மனதார வழிபட்டாலும் பலன் உண்டு.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி கிரிவலம் தெரியும் அதென்ன குபேர கிரிவலம் என்று யோசிக்கிறீர்களா? குபேர லிங்க கிரிவலம் வலம் வருவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத சிவராத்திரி நாளன்று குபேரன் ஈசனை வணங்கி வலம் வருகிறார் என்பது ஐதீகம். இன்றைய தினம் குபேர கிரிவலம் வரும் தினமாகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பவுர்ணமி கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பவுர்ணமி நாள் தவிர்த்து பிற நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்னர். இந்த நிலையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குபேர கிரிவலம் வருவதற்கும் குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலம் - எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மை தெரியுமா
குபேர லிங்கம்
கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.
குபேரன் வருகை
மலையே எம்பெருமான் ஈசனாக காட்சியளிக்கும் புண்ணிய திருத்தலம் தான் திருவண்ணாமலை. காசிக்கு போய் கங்கையில் குளித்தால் தான் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். இவரை வணங்கி கிரிவலம் வந்தாலே எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அதிலும் குபேர லிங்கத்தை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தால் அடுத்து வரும் ஏழு தலைமுறைக்கும் நிம்மதியாகவும், குபேரனைப் போல் செல்வச் செழிப்புடனும் வாழலாம் என்பது நம்பிக்கை.
செல்வ வளம் பெருகும்
கிரிவலப்பாதையில் ஏழாவதாக அமைந்துள்ளது தான் குபேர லிங்கம். குபேர லிங்கத்தை மற்ற நாட்களை விட சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வருவது மிக்க நன்மை தரும். அதிலும் கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் வலம் வருவது சிறப்பான பலனை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணம், கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் தான், செல்வத்திற்கு அதிபதியான குபேரன், பூமிக்கு வந்து, அண்ணாமலையாரை வலம் வருவார் என்பது ஐதீகம்.
குபேர கிரிவலம்
குபேரன் இரவு 7 மணியளவில் தன்னுடைய கிரிவல பயணத்தை தொடங்குவார். அந்த நேரத்தில் நாமும் அவருடன் இணைந்து பயபக்தியுடன் குபேர லிங்கத்தை தரிசித்து வணங்கிவிட்டு, அண்ணாமலையாரை கிரிவலம் வந்தால், அருணாச்சலேஸ்வரரின் அருளும், அங்குள்ள சித்தர்கள், யோகிகள், தேவர்கள் மற்றும் குபேரனின் அருளாசியும் கிடைக்கும். குபேரனைப் போல் செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம்
அண்ணாமலையார் தரிசனம்
இன்றைய தினம் குபேர கிரிவலம் வருவதற்கு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குபேர லிங்கத்தை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்றரை மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால், கவலைப்படவேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடம் நோக்கி கும்பிட்டால் போதுமானது. இன்றைய தினம் நாமும் குபேரனுடன் இணைந்து குபேர லிங்கத்தை தரிசித்து கிரிவலம் வர முடியவில்லையே என்ற கவலை வேண்டாம் நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரையும் குபேரரையும் மானசீகமாக நினைத்து வணங்குங்கள் குபேர கிரிவலம் வந்த புண்ணியமும் அதே போல பலனும் கிடைக்கும்.