மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் ஆடி வீதிகளில் சட்டத்தேரில் உலா
சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் ஆடி வீதிகளில் சட்டத்தேரில் உலா வந்து அருள்பாலித்தனர்.
மதுரை: மதுரையை அரசாளும் மீனாட்சியம்மனுக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு பூப்பல்லக்கில் அம்மனும், சுவாமியும் வலம் வந்தனர். திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் புது மணத்தம்பதியர் ஆடி வீதிகளில் சட்டத்தேரில் உலா வந்து அருள்பாலித்தனர்.
Recommended Video
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியா விடை அம்மனுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள்பாலித்தனர். சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவின் எட்டாம் திருநாளன்று பட்டாபிஷேகமும், ஒன்பதாம் திருநாளன்று மீனாட்சி அம்மன் அஷ்ட திக்கு விஜயமும் நடைபெற்றது. பத்தாம் நாளன்று திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சித்திரை தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு மறுநாள் திருத்தேர் வீதி உலா நடைபெறுவது வழக்கம். மாசி வீதிகளில் சுவாமி வீதியுலா வருவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். திருக்கல்யாணத்தை காண முடியாத பக்தர்கள் கூட திருத்தேரோட்டத்தில் புதுமணத்தம்பதிகளாக வலம் வரும் அம்மை அப்பனை கண்டு தரிசனம் செய்வார்கள்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் உலா
இந்த ஆண்டு திருத்தேரோட்டம் தடைசெய்யப்பட்டதை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்காக புதிதாக சட்டத் தேர் செய்யப்பட்டது. கோவிலுக்குள் சட்டத்தேரோட்டம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் தனித்தேரிலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மன் தனித்தேரிலும் வலம் வந்தனர்.

ஆடி வீதிகளில் வலம் வந்த அம்மன்
அலங்கரிக்கப்பட்ட சட்டத்தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஞாயிறன்று காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் அமர்ந்து ஆடி வீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்வில் கோயில் ஊழியர்கள், சிவாச்சாரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தீர்த்தவாரியுடன் நிறைவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 12ஆம் நாளான இன்றைய தினம் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இனி வரும் காலங்களில் எந்த வித பாதிப்பும் இன்றி சித்திரை திருவிழா வழக்கம் போல நடைபெற வேண்டும் என்று பக்தர்களும் மதுரை மக்களும் மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications