சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் மதுரை..26ல் சப்பர முகூர்த்தம்..மே 5ல் வைகையில் இறங்கும் கள்ளழகர்
மதுரை: அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடங்குகிறது. சப்பர முகூர்த்தம் மற்றும் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி 26ம் தேதி நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதே போல அழகர்கோவில் கள்ளழகர் ஆலயத்தில் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
சப்பர முகூர்த்தம் மற்றும் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி 26ம் தேதி நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த சப்பர முகூர்த்தம் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெறும்.
இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் மு. ராமசாமி அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் வருகிற 26.01.2023ஆம் தேதி தை மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை பூச தெப்பத்திருவிழா முடிந்து மாசி மாத திருவிழாக்கள், பங்குனி உத்திர திருவிழாக்கள் முடிந்த பின்னர் சித்திரை மாதம் திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார்.