திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு அண்ணன் ஸ்ரீரங்கநாதர் கொடுத்த சீர்வரிசை
மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து தங்கை முறையான திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசைப் பொருட்கள் மேள தாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டன.
திருச்சி: மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன், புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மங்கல பொருட்கள், மாலைகள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு வழங்கப்பட்டது.
திருச்சி மாநகருக்கு வெகு அருகில் உள்ளது பஞ்சபூத திருத்தலங்களில் அப்பு (நீர்) தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமையானதும், அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் சோழ நாட்டின் காவிரி வடகரை கோவில்களில் அமைந்துள்ள அறுபதாவது கோவிலாகும்.
அதே போல், திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள மற்றொரு அம்மன் ஆலயம் சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சமயபுரம் மாரியம்மன் தங்கை என்ற முறையில், ஆண்டுதோறும் தைப்பூச திருநாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்பிக்கப்படுவது காலம் காலமாக நடந்துவரும் நடைமுறையாகும்.
அதே போல், ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு தங்கையான திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அன்னை அகிலாண்டேஸ்வரிக்கும் ஆண்டு தோறும் மார்கழி மாத முதல் நாளன்று நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசைகள் சமர்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கம் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை பின்பற்றப்பட்டு வந்தது. காலப்போக்கில் அந்த நடைமுறை மறந்து போய், நூற்றைம்பது ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து சீர்வரிசை சமர்க்கப்படவில்லை.
மார்கழி முதல் நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து சீர்வரிசைப் பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில், சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன வழக்கத்தை புதுப்பித்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர இரு கோவில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன், புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மங்கல பொருட்கள், மாலைகள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.
சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தையும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரம் முன் வைத்து, திருவானைக்காவல் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிவேதனத்துடன், மார்கழி முதல் நாளான நேற்று காலை பூஜைகள் நடைபெற்றன. அப்போது ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகையான உபசாரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.