கமலா ஏகாதசி விரதம்: மகாலட்சுமி அருள் கிடைக்கும் பத்ம ஏகாதசி - கோடீஸ்வர யோகம் தேடி வரும்
விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தன ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இது பத்ம ஏகாதசி அல்லது கமலா ஏகாதசி என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை: பெருமாளுக்கு உகந்த ஏகாதசி மொத்தம் 24. ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் வைகுண்ட பிராப்தம் கிடைக்கும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இதன்காரணமாகவே விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். புரட்டாசி 1ஆம் தேதி பரிவர்த்தன ஏகாதசியாகவும், கமலா ஏகாதசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி கமலா ஏகாதசி அல்லது பத்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பிறக்கும் போது ஏகாதசி திதியுடன் பிறக்கிறது. 16ஆம் தேதி அஜ ஏகாதசியாகவும், புரட்டாசி 30ஆம் தேதி பாபாங்குச ஏகாதசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
புரட்டாசி முதல் நாள் கமலா ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. கமலம் என்பது தாமரையாகும் . தாமரை மலரிலிருந்து அருள் புரியும் அன்னை மகாலட்சுமியை இந்தநாளில் வணங்கினால் பெரும் செல்வம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்கிவிடும்.
கமலா ஏகாதசியின் மகிமையை மகாலட்சுமிதேவியே சொல்லி இருக்கிறார். அவந்தி தேசத்தில் சிவசர்மா என்பவர் இருந்தார். அவருக்கு ஐந்து பிள்ளைகள் அவர்களில் கடைசிப் பையன் ஜெயசர்மா. சிவசர்மாவின் குடும்பத்தில், தரித்திரம் கூடாரம் அடித்துத் தங்கி இருந்தது. பிள்ளைகளில் ஜெயசர்மா தீமைகள் மட்டுமே செய்வான் அதனால் அவன் பாவி என்று பட்டப்பெயரே பெரும் அளவுக்கு இருந்தான்.
வறுமையின் பிடியில் இருந்த சிவசர்மா, ஜெயசர்மாவின் தீமைகளைப் பொறுக்க முடியாமல் அவனை வீட்டைவிட்டு விரட்டி விட்டார். யாராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா ஏதாவது கிடைக்காதா என்று நினைத்து வெளியே போன ஜெயசர்மா, ஹரிமித்ரர் என்னும் மகரிஷியின் ஆசிரமத்துக்குள் நுழைந்தான்.
அங்கே மகிரிஷி ஹரிமித்ரர் "கமலா ஏகாதசியின் மகிமையைப்பற்றிச் சொல்லி, அதன் பெருமைகளையும் தனது சீடர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அதை முழுவதுமாக கேட்ட ஜெயசர்மா, "சே, என்ன மனிதன் நான். இவ்வளவு காலமாக நல்லதைத் தெரிந்து கொள்ளாமல், தீமைகளை செய்வதிலேயே காலத்தை கழித்து விட்டேனே, இப்போதாவது நல்லதைத் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததே என்று நினைத்தான்.
எப்படியாவது இந்தக் கமலா ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். அடிக்கடி வராமல், எப்போதோ வரும் கமலா ஏகாதசி, அந்த ஆண்டு வந்தது. அபூர்வமான அந்தச் சந்தர்ப்பத்தை ஜெயசர்மா விடவில்லை. ஹரிமித்ரர் மகரிஷியின் உபதேசப்படி கமலா ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவை பூஜை செய்தான்.
அன்று இரவு ஜெயசர்மாவின் எதிரில் மகாலட்சுமி தோன்றினாள் . கண்ணெதிரே காட்சி அளித்த அன்னை மகாலட்சுமியை கைகள் கூப்பி வணங்கித் துதித்தான் ஜெயசர்மா. "தாயே, நீ எனக்கு தரிசனம் தரக் கூடிய அளவுக்கு, நான் என்ன புண்ணியம் செய்தேன்" என்று கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
ஜெயசர்மா, நீ செய்த கமலா ஏகாதசி விரதமே, கமலையான என்னை உன் கண்களுக்கு முன்னாள் நிறுத்தியது. உனக்கு ஏராளமான செல்வம் உண்டாகும் என்று ஆசி கூறிய அன்னை மகாலட்சுமி மறைந்தாள். தீயவனாக வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஜெயசர்மா, திருந்தியவனாக திருமகள் அருளுடன் வீடு திரும்பினான். லட்சுமி தேவியின் வாக்குப்படி அவன் வீட்டில் அளவில்லாத செல்வங்கள் சேர்ந்தன.
ஏகாதசி விரதம் வயதானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை. இளைய தலைமுறையினரும் விரதம் இருந்து பெருமாளையும் மகாலட்சுமியையும் வணங்கலாம். இறை அருளோடு பொருளும் கிடைக்கும். இந்த ஆண்டு சிறப்பான நாளாக ஏகாதசியும் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளையும் மகாலட்சுமியையும் வணங்க செல்வ வளம் பெருகும்.
ஜெயசர்மா என்ற ஒருவன் இருந்த விரதம், அவன் குடும்பத்தில் இருந்த வறுமையை வெளியே விரட்டி, அங்கே திருமகளைக் குடியேற்றியது. குடும்பத்தில் ஒருவன் இருக்கும் விரதம் அவன் குடும்பத்தையே உயர்த்தும் என்பதையும் தெளிவாக விளக்குகிறது. கமலா ஏகாதசி அபூர்வமாக எப்போதாவது வரும். அது இன்று முதல் நாளை வரை உள்ளது. இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் அனைவரும் உயரலாம்.
அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய
ஏகாதசி விரதமுறை
தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளை தான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மகாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் சுவாமிக்கு பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.
ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபத்துடன் சண்டை போட்டு அடுத்தவர்களைத் திட்டுவது, கலக்கம் அலங்காரம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.
துவாதசி அன்று காலையில் சுவாமியைப் பூஜை செய்துவிட்டுப் பிறகே சாப்பிட வேண்டும். ஓர் ஏழைக்காவது அன்னதானம் செய்து விட்டு அதன் பிறகே நாம் சாப்பிடுவது நல்லது. துவாதசி அன்று அகத்திகீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றறை சாப்பிடுவது நல்லது.