ஆறு கிரகங்கள் நேர் கோட்டில் அணிவகுப்பு... யாருக்கு ஆபத்து - ஜோதிடர்கள் சொல்வதென்ன?
ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் அரிய நிகழ்வினால் நன்மையா? தீமையா? இதனால் ஆபத்து எதுவும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நவ கிரகங்கள் இன்றைய சூழ்நிலையில் வரிசையாக அமைந்துள்ளது.இதில் ராகு கேது நிழல் கிரகங்கள். பிற ஏழு கிரகங்களில் சில இணைந்தும் கட்டங்களில் அமைந்துள்ளன. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வானத்தின் கிழக்குப் பக்கத்தில் கிரகங்களின் அணிவகுப்பை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். அதில் நமது கண்களுக்கு வரிசையாக குரு, சுக்கிரன். செவ்வாய், சனி, சந்திரனை பார்க்கலாம். கிரகங்களின் இந்த அணிவகுப்பு நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர்.
ஜோதிடர்கள் சொன்னது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தை தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

ஒரே வரிசையில் கிரகங்கள்
கடந்த சில நாட்களாகவே அதிகாலையில் வானத்தின் கிழக்குப் பக்கத்தில் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிசயம் தென்பட்டிருக்கும். அதாவது நட்சத்திரங்கள் வரிசையாக அணிவகுத்திருப்பது போல தென்பட்டிருக்கும். இந்த கிரகங்களின் அணிவகுப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வு என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கண்ணுக்கு தெரியும் கிரகங்களின் அணிவகுப்பு
சுக்கிரன், குரு, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக இருக்க சில தினங்களுக்கு முன்பு சந்திரனும் நேர்கோட்டில் இருந்தது. பூமியில் இருந்து பார்ப்பவர்களால் இதை வெறும் கண்களால் காண முடிந்தது. பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
ஜோதிடப்படி தற்போது ராசிக்கட்டங்களில் கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. மேஷ ராசியில் சூரியன், புதன், ராகு, மீன ராசியில் குரு, கும்ப ராசியில் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், மகர ராசியில் சனி போன்ற கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதில் சூரியன் விடிந்த பிறகு நமது கண்களால் நேரில் பார்க்க முடியும். புதன் சூரியனுக்கு அருகில் மிகச்சிறியதாக இருப்பதால் நமது கண்களால் பார்க்க முடியாது. எனவேதான் செவ்வாய், சுக்கிரன், குரு, சனி, சந்திரன் போன்ற கிரகங்களின் அணிவகுப்பை நமது கண்களால் பார்க்க முடிகிறது.

அரசியல்வாதிகளுக்கு கெண்டம்
இந்த கிரகங்களின் அணிவகுப்பினால் மக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா என்று யாரும் எதுவும் கணித்து சொல்லாவிட்டாலும் நடக்கின்றன சாலை விபத்துக்கள், தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும் போது கிரகங்களின் சேர்க்கை பற்றிய அச்சம் எழுந்துள்ளது. சுபகிருது வருட தமிழ் பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு மூத்த அரசியல்வாதிகளுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையவர்களைத் தாக்கும் புதிய நோய்கள்
இந்த ஆண்டு புதிய விஷ காய்ச்சல் வேகமாக பரவும் என்றும் குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புடைய பழம்பெரும் புள்ளிகள் சிறை செல்வார்கள் என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாதாரண மக்கள் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நோய்கள் நீங்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications